சசிகலாவுக்கு சகல உதவிகளும் செய்த பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் அனிதா.. டிரான்ஸ்பர்!!
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையின் கண்காணிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட அனிதா வேறு ஒரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் சசிகலாவுக்கு கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் சிறை துணை டிஐஜியாக இருந்த ரூபா ஆய்வில் கண்டதை புகாராக அளித்தார்.
அவர் சிறை துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் மீதும் சசிகலாவிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து சிறை முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விசாரணையில் யாருடைய சம்பந்தப்பட்டவர்களின் குறுக்கீடு இருக்க கூடாது என்பதற்காக சிறை துறை டிஐஜியாக இருந்த ரூபாவை போக்குவரத்து துறைக்கு இடமாற்றியும், டிஜிபி சத்தியநாராயண ராவை காத்திருப்போர் பட்டியலிலும் வைத்தனர்.
மேலும் சிறையில் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ண குமாரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு அனிதா நியமிக்கப்பட்டார். அவர் சசிகலாவுக்கு ஆதரவானவர் என்ற தகவல்கள் வெளியாகின. அனிதாவின் நியமனத்துக்கு கைதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் வெளியான வீடியோ காட்சியில் சசிகலாவும் , இளவரசியும் ஷாப்பிங் சென்றுவிட்டு வருவது போன்றும் அவர்களுக்கு துணையாக சிறை கண்காணிப்பாளர் அனிதா வருவது போன்ரும் காட்சிகள் இருந்தன.
இதைத் தொடர்ந்து சிறை துறை கண்காணிப்பாளராக இருந்த அனிதா அங்கிருந்து தார்வாட் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரமேஷ் என்பவரை பரப்பன அக்ரஹார சிறையின் கண்காணிப்பாளராக நியமித்துள்ளனர்.