அன்னை தெரசா குறித்து பகவத் பேச்சுக்கு எதிர்ப்பு: ராஜ்யசபாவில் எதிர்கட்சிகள் அமளி
டெல்லி: அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளது தொடர்பாக எதிர்கட்சிகள் இன்று ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டன.
மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவது தான் அன்னை தெரசாவின் முக்கிய நோக்கமாக இருந்தது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவிந்திருந்தார். இந்நிலையில் இன்று காலை ராஜ்யசபா கூடியதும் பகவத்தின் பேச்சுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்காவிட்டால் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்கட்சிகள் தெரிவித்தன.
இதையடுத்து எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீ்ண்டும் கூடியதும் எதிர்கட்சியினரை சமாதானப்படுத்த நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில்,
ஒட்டு மொத்த நாடும் அன்னை தெரசா மீது மதிப்பு வைத்துள்ளது. அவரின் சேவையை யாரும் மறுப்பதற்கும் இல்லை, சந்தேகப்படுவதற்கும் இல்லை. நாடாளுமன்றத்திற்கு வெளியே சிலர் ஏதாவது கூறியிருக்கலாம் என்றார்.
முக்தாரின் சமாதானத்தை எதிர்கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. பகவத்தின் பேச்சுக்கு ஒருவரியில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் தெரிவித்தார். பகவத்தின் பேச்சு பாரத ரத்னா விருது பெற்ற அனைவரையும், நாடாளுமன்றத்தையும் அவமதிப்பதாக உள்ளது என்று திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த டெரக் ஓ பிரையன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை 43 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் அன்னை தெரசா. இந்த பேச்சு அவரை மட்டும் அல்ல பாரத ரத்னா விருது பெற்ற மற்ற 42 பேரையும் அவமதிப்பதாக உள்ளது. அன்னை தெரசா மக்களை மாற்றியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். ஆமாம் அன்னை தெரசாவும் அதையே தான் தெரிவித்துள்ளார். ஒரு இந்துவை நல்ல இந்துவாகவும், கிறிஸ்தவரை நல்ல கிறிஸ்தவராகவும், முஸ்லீமை நல்ல முஸ்லீமாகவும் மாற்றியதாக அன்னை தெரசாவே தெரிவித்துள்ளார் என்றார்.