ஆள் வைத்து தேர்வெழுதி மாட்டிக்கொண்ட சத்தீஸ்கர் கல்வி அமைச்சரின் மனைவி.. பா.ஜ.க.வுக்கு புது சிக்கல்!
ஆள் வைத்து தேர்வெழுதி மாட்டிக்கொண்ட சத்தீஸ்கர் கல்வி அமைச்சரின் மனைவி.. பா.ஜ.க. வுக்கு புது சிக்கல்!
ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்வி அமைச்சரின் மனைவி தனக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை வைத்து பல்கலைக் கழக தேர்வெழுதிய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் கேதார் காஷ்யப். இவரது மனைவி சாந்தி காஷ்யப் சுந்தர்லால் ஷர்மா திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அக்தால்பூரில் நடைபெற்ற பல்கலைக் கழகத் தேர்வை வேறு ஒரு பெண்ணை வைத்து கல்வி அமைச்சரின் மனைவி எழுதியுள்ளார். இது குறித்து பல்கலைக் கழக நிர்வாகம் அறிந்ததும் அந்த பெண் உடனடியாக வெளியேற்றப்பட்டார். விசாரணையில் அந்த பெண், பான்புரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் மவுரியா என்பது தெரிய வந்தது.
அண்டை மாநிலமான பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், தற்போது அதே பா.ஜ.க. ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்வி அமைச்சரின் மனைவியே ஆள் வைத்து தேர்வெழுதி மாட்டிக்கொண்ட சம்பவம் அக்கட்சிக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. இது கல்வி அமைச்சரிருக்கு தெரியாமல் நடந்திருக்காது என்று எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்த தயாராகி வருகின்றன.
ஏற்கெனவே சத்தீஸ்கர் முதல்வர் ரமண்சிங் மீது ஊழல் புகார்களை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.