டெல்லியில் முகாமிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்திய புதுவை முதல்வர்!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமியிடம் மத்திய அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார்.
டெல்லி: தமிழகத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உறுதி செய்துள்ளது போன்றே புதுவை மாநிலம் காரைக்காலிலும் செயல்படுத்தப் போவதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து, அம்மாநில முதல்வர் நாராயணசாமி டெல்லி விரைந்து அதனை தடுப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டினார். இதுதொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்த ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து, இன்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினேன். அப்போது அவர் இது தொடர்பான கோப்புகளை எனக்கு காட்டினார்.
அதில், காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எதுவும் செயல் படுத்தப்படவில்லை என்ற தகவல் இருந்தது. மேலும், காரைக்காலில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் உள்ள தமிழக பகுதியில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்தது.
தமிழக மக்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பதை அமைச்சருக்கு தெரிவித்தேன். அதற்கு, அப்படி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று அமைச்சர் தெரிவித்தார் என்று நாராயணசாமி கூறினார்.