மகன் போட்டோவை போட்டு கேட்டாரே ஒரு கேள்வி.. நாட்டையே உலுக்கிய புனே பெண்ணின் பேஸ்புக் போஸ்ட்!
புனே: "காய்ச்சலில் அவதிப்படும் குழந்தையையும் பார்த்துக் கொண்டு ஆபீசிலும் என்னால் வேலை செய்ய முடிகிறது, ஆனால் சட்டசபையில் அமைச்சர்கள் ஏன் தூங்குகிறார்கள்" என்று புனேயை சேர்ந்த வங்கி, பெண் ஊழியர் சுவாதி சிதால்கர் பேஸ்புக்கில் படத்தோடு கேட்ட ஒரு கேள்வி இன்று அகில இந்தியாவிலும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
சுவாதி சிதால்கரின் பேஸ்புக் பக்கத்திலுள்ள இந்த ஸ்டேடஸ் தகவலையும், அதோடு ஷேர் செய்திருந்த, காய்ச்சலில் அவதிப்பட்டு தரையில் படுத்திருக்கும் அவரது மகனின் படத்தையும், 5 நாட்களுக்குள் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஷேர் செய்து, அதிர வைத்துள்ளனர்.
சுவாதி சிதால்கரின் பேஸ்புக் பக்க கோபத்திற்கு என்ன காரணம்.. அவர் அப்படி என்ன பதிவிட்டார் என்ற உருக்கமான தகவல் இதுதான்.
உருக்கும் படம்
சுவாதி சிதால்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதையும், தனது நாற்காலிக்கு பின்னால், தரையில் தனது குட்டி மகன் படுத்து பால் புட்டியை வாயில் வைத்திருப்பதை போலவும் படம் ஷேர் செய்துள்ளார்.
இதயம் கீழே கிடக்கிறது
இந்த படத்துக்கு அருகே, அவர் கூறியிருந்த 'நிலைத்தகவல்' நெஞ்சை பிசைவதாக இருந்தது. "இங்கே தரையில் படுத்திருப்பது குழந்தையல்ல. எனது இதயம்தான், தரையில் கிடக்கிறது. அவனுக்கு காய்ச்சல் இருக்கிறது. எனவே, வேறு யாரிடமும் சேர்ந்து இருக்க மறுக்கிறான். எனது பணியில் பாதி நாள் முடிந்துவிட்டது. ஒரு லோன் விடுவிக்கும் பணியில் நான் இருப்பதால் என்னால் லீவும் போட முடியவில்லை" இவ்வாறு சுவாதி கூறியிருந்தார். இதற்கு பிறகுள்ள வரிகள்தான் டாப்.
தூங்கும் அமைச்சர்கள்
"ஆனால்.. என்னால், இந்த இரு வேலைகளையும் பார்த்துக்கொள்ள முடியும். இந்த தகவலை, சட்டசபையில் தூங்கி வழியும் அமைச்சர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்" இவ்வாறு சுவாதி கூறியுள்ளார். தன்னால் குழந்தையையும், ஆபீஸ் வேலையையும் ஒருங்கே பார்க்க முடியும் எனும்போது, அமைச்சர்கள் அசெம்பிளியில் தூங்குவது சரியா என்பது அவரது கேள்வியின் சாராம்சம். இதை தாங்களும் கேட்க விரும்பியதாலோ என்னவோ இத்தனை பேர் அந்த பேஸ்புக் பதிவை ஷேர் செய்து ஆதரவு காட்டியுள்ளனர்.
காய்ச்சல்
பேஸ்புக் பதிவு வைரலான நிலையில், நிருபர்கள் சுவாதியை தொடர்பு கொண்டனர். அவர் கூறியது: எனது மகனுக்கு 3 வயது. காய்ச்சலால் அவதிப்பட்டான். எனது கணவர் வீட்டில் இருந்து அவனை பார்த்துக் கொண்டார். ஆனால், அம்மா வேண்டும் என்று அவன் அழுது கொண்டேயிருந்தான். இதை போனில் எனது கணவர் கூறினார். என்னால் விடுமுறை எடுக்க முடியாததால், ஆபீசிலேயே மகனை கொண்டுவிடுமாறு கூறினேன்.
பணியையும் முடித்தேன்
வங்கியில் எனது மகனை கொண்டுவிட்டதும், அவனுக்கு புட்டியில் பால் அடைத்து கொடுத்தேன். அதை குடித்தபடி தரையில் படுத்து தூங்கிவிட்டான். அதற்கு நடுவே நான் எனது அலுவலக பணியை முடித்தேன்.
தாய்மார்களின் கஷ்டம்
நான் மட்டுமல்ல, உலகில் பல பகுதிகளிலும் பணிக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இப்படி பார்த்துக்கொள்கிறார்கள். எனவேதான் இதை வைத்து ஏன் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறக்கூடாது என நினைத்து, அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டேன்.
குழந்தைகளை போல பாருங்கள்
பொதுமக்களை, குழந்தைகளை போல பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அமைச்சர்களுக்கு உள்ளது. எனது குழந்தையை நான் பார்த்துக் கொண்டதை போல, மக்களை, அமைச்சர்களும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோரிக்கை
இந்த மெசேஜ், சட்டசபையில் தூங்கும் அமைச்சர்களுக்கானது மட்டுமல்ல. தங்கள் பணியில் சுணங்கிக் கிடக்கும் அமைச்சர்கள் அனைவருக்குமானதுதான். எந்த ஒரு திட்டத்தை கொண்டுவந்தாலும், உங்கள் மக்களின் நலனை காக்க வகை செய்யும் வகையில் அதை கொண்டுவாருங்கள் என்பதே அமைச்சர்களுக்கு எனது கோரிக்கை.
நடைபாதையில் வேதனை
எனது மகன் தரையில் படுத்திருப்பதைவிட, இந்த தேசத்தில் பல ஆயிரம் பிச்சைக்காரர்கள், ஏழை மக்கள், சாலையோர நடைபாதைகளில் படுத்திருப்பது வேதனை தருகிறது. அமைச்சர்கள் ஒழுங்காக வேலை பார்த்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதல்லவா. பிரதமர் மோடி என்னை பொறுத்தளவில் ஒரு சூப்பர் ஹீரோ போன்றவர். மோடிதான், இந்த நாட்டிற்கு தாய் போன்றவர். அவரே, இம்மக்கள் நலனையும் காக்க வேண்டும். இவ்வாறு சுவாதி தெரிவித்தார்.
குடும்ப தலைவி
சுவாதியின் கணவர் அவரைவிட 7 வயது இளையவர். மல்டிநேஷனல் கம்பெனியில் வேலை பார்த்த அவரை வேலையை ராஜினாமா செய்ய வைத்த சுவாதி, கணவர் ஆசைப்படும் கிரிக்கெட் விளையாட்டில் அவர் சோபிப்பதற்காக உற்சாகப்படுத்தி வருகிறார். இதற்காக புனேயிலுள்ள கிரிக்கெட் அகாடமியில் அவரை சேர்த்துவிட்டுள்ளாராம். எனவே அக்குடும்பத்தின் பொறுப்பை சுவாதி மட்டுமே கவனித்துக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.