தலாக் சொன்னா ஏற்கமாட்டேன்... கோர்ட் விவாகரத்து தரட்டும்: புனே முஸ்லீம் பெண் அதிரடி
புனே: 'தலாக்' முறை விவாகரத்தை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் மூலம் விவாகரத்துப் பெற விரும்புவதாக மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த முஸ்லீம் பெண் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தலாக், தலாக், தலாக்" என்று மூன்று முறைக் கூறி பெண்களை விவாகரத்து செய்யும் முறை இஸ்லாமிய மதத்தில் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.
தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாகவும் சில ஆண்கள் தலாக் என்று கூறி விவாகரத்து செய்து வருகின்றனர். போதிய படிப்பறிவில்லாத பெண்கள் சட்ட ரீதியாக இதனை எப்படி அணுகுவது எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.
இந்த விவகாரத்து முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்லாமிய பெண்களில் சிலர், இனிமேலும் இந்த கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாது என பொங்கி எழுந்துள்ளனர். குரானில் எந்த இடத்திலும் 'தலாக்' விவாகரத்து முறை குறிப்பிடப்படாத நிலையில், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவாகரத்து முறையால் பல பெண்கள் மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவதாக முஸ்லீம் பெண்கள் அமைப்பினர் போராடி வருகின்றனர்.
பாகிஸ்தான் உள்பட 21 நாடுகளில் தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ள போது, இந்திய பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று தலாக் முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். தலாக் விவாகரத்து முறையை எதிர்த்து அரசு சட்டம் கொண்டு வரவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலாக் முறை விவாகரத்தை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் மூலமே விவகாரத்து பெற விரும்புவதாக கூறியுள்ளார் புனேயைச் சேர்ந்த முஸ்லீம் பெண் ஒருவர்.
புனே அருகேயுள்ள பாரமதியைச் சேர்ந்த இளம்பெண் அர்ஷியா பாக்வன், 18. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகமது காசிம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களிலேயே முகமது காசிமின் தாய் உள்ளிட்ட அவரது உறவினர்கள் அர்ஷியாவை கொடுமைப்படுத்திய கூறப்படுகிறது. இதனிடையே அர்ஷியாவுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.
புகுந்த வீட்டில் கொடுமை உச்சமடைந்ததை அடுத்து அர்ஷியா அண்மையில் தனது தாய் வீடுக்கு வந்து விட்டார். இந்நிலையில், அவரது கணவரிடம் இருந்து சில நாள்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. அதில் மூன்று முறை தலாக் என்று எழுதி, அர்ஷியாவை விவாகரத்து செய்வதாக முகமது காஷிம் குறிப்பட்டிருந்தார். இது அர்ஷியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முஸ்லிம் சத்ய சோதக் மண்டல் என்ற அமைப்பு, அர்ஷியாவிற்கு ஆதரவளித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திருமணமான 6 மாதங்களிலேயே எனது மாமியார் உள்ளிட்டோர் என்னைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினர்.
கர்ப்பிணி என்றும் பாராமல் என்னை துன்புறுத்தி வந்தனர். இதனால் அண்மையில் எனது 8 மாத குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்தேன். எனது கணவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றபோது அவர் என்னிடம் பேசுவதைத் தவிர்த்தார்.
இந்நிலையில், அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் 3 முறை தலாக் என்று எழுதி என்னை விவாகரத்து செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு தரப்பாக தலாக் கொடுப்பதை பெண்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, முஸ்லிம் மதச் சீர்திருத்த அமைப்பை நாடினேன்.
தலாக் விவகாரத்து முறையை ஏற்க நான் விரும்பவில்லை. நீதிமன்றம் மூலமே எனது கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற விரும்புகிறேன் என்று கூறினார்.
தலாக் விவாகரத்து முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் கருத்துத் தெரிவித்தது. இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் உள்ளிட்ட இஸ்ஸாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில், முஸ்லிம் பெண் ஒருவர் தலாக் விவாகரத்து முறையை ஏற்க மறுத்துள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.