கேதார்நாத்துக்கு நடந்து போனது ஏன்?... ராகுல் தரும் உருக்கமான விளக்கம்!
கேதார்நாத்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த 2013ம் ஆண்டு பயங்கர வெள்ளத்தில் சிக்கி மடிந்து போன மக்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலுமே தான் நடந்து போனதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஓய்விலிருந்து திரும்பி வந்து டெல்லியைக் கலக்கிய ராகுல் காந்தி திடீரென நேற்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று அவர் கேதார்நாத் கோவிலில் சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தி பூஜை செய்தார்.
கோவிலுக்கு அவர் நடந்து வந்து தரிசனம் செய்தார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், நான் கடவுளிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. நான் கோவிலுக்கு நடந்து வந்தது பெரிய விஷயம் இல்லை.
கடந்த 2013ம் ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களை நினைவு கூறும் வகையிலேயே நடந்து வந்தேன் என்றார் ராகுல் காந்தி.
இன்று காலை எட்டரை மணிக்கு கோவிலுக்கு வந்த ராகுல் காந்தி அங்கு சிவலிங்கத்தை தரிசித்து வணங்கி வழிபட்டார்.