"சிவாஜி ராவை" காங்கிரஸுக்குள் இழுக்க சீரியஸாக முயற்சித்த நரசிம்மராவ்....!
ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தங்கள் பக்கம் இழுக்க எத்தனையோ பேர் தீவிரமாக முயற்சித்தபடிதான் உள்ளனர். ஆனால் யாருடைய பிடியிலும் சிக்காமல் ரஜினி பத்திரமாக நழுவியபடி இருக்கிறார்.
ஆனால் 1996 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு ரஜினிகாந்த்தை காங்கிரஸில் சேர்க்க அப்போதைய பிரதமர் பி. வி.நரசிம்மராவ் தீவிரமாக முயன்றுள்ளார். இதை அவரது பேரன் என்.வி. சுபாஷ் தற்போது தெரிவித்துள்ளார். இவர் தற்போது பாஜகவில் இருக்கிறார். ராவின் மூத்த மகளுடைய மகன்தான் சுபாஷ்.
இதுதொடர்பாக 2 முறை ரஜினியை நேரில் அழைத்துப் பேசியுள்ளார் நரசிம்ம ராவ். ஆனால் ரஜினிதான் நழுவி விட்டாராம்.
தவிர்க்க முடியாத "அரசியல் சக்தி"
ரஜினிகாந்த் ஒரு உச்ச நடிகராக மட்டும் அல்ல, தமிழகத்தின் தவிர்க்க முடியாத "அரசியல் சக்தி"யாகவும் திகழ்கிறார்.
அரசியலில் இல்லாவிட்டாலும்
ரஜினி அரசியலில் இல்லாவிட்டாலும் கூட கிட்டத்தட்ட அவரைச் சுற்றி ஒரு அரசியல் நடந்தபடிதான் இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த சக்தியை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்த ஒரு அரசியல் கூட்டம் சுற்றியபடிதான் இருக்கிறது.
நரசிம்ம ராவின் முயற்சி
மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவும் கூட அவரது காலத்தில் ரஜினியை காங்கிரஸுக்குள் கொண்டு வர பகீரதப்பிரயத்தனம் செய்துள்ளார். ஆனால் அவருக்கும் தோல்வியே கிடைத்தது.
ரஜினியிடம் பேசிய ராவ்
இதுகுறித்து ராவின் பேரன் என்.வி. சுபாஷ் கூறுகையில், 1996 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக ரஜினியை காங்கிரஸில் சேர்த்து விட வேண்டும் என்று எனது தாத்தா தீவிரமாக இருந்தார். இதற்காக 2 முறை ரஜினியை வரவழைத்தும் பேசினார்.
ரஜினி போட்ட கண்டிஷன்
அப்போது காங்கிரஸில் சேர தனக்கு விருப்பம் இல்லை என்று ரஜினி கூறி விட்டார். அதேசமயம், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸுக்கு ஆதரவாக தான் தீவிரப் பிரசாரம் செய்யத் தயார் என்று ரஜினி கூறினார்.
எனது தாத்தா தடையாக இல்லை
எனது தாத்தாவால்தான் ரஜினி காங்கிரஸில் சேர முடியாமல் போய் விட்டதாக சில தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். அது தவறு. உண்மையில் ரஜினியை காங்கிரஸில் சேர்க்கவே எனது தாத்தா தீவிரமாக முயற்சித்தார். அவர் ரஜினி வருவதை விரும்பினார், தடுக்க விரும்பவில்லை.
டிவியில் பிரசாரம் செய்யவும் தயாராக இருந்த ரஜினி
2வது முறை எனது தாத்தாவை ரஜினி சந்தித்தபோது தான் காங்கிரஸுக்காக டிவி மூலமாக பிரசாரம் செய்யவும் தயார் என்று கூறினார். அப்போதும் கூட கட்சியில் சேருமாறு எனது தாத்தா ரஜினியை வலியுறுத்தினார்.
திடீர் அமெரிக்க பயணம்
இந்த சமயத்தில்தான் ரஜினிகாந்த் திடீரென அமெரிக்காவுக்குக் கிளம்பிப் போய் விட்டார். இதனால் அவர் கட்சியில் சேருவது சந்தேகம் என்ற முடிவுக்கு எனது தாத்தா வந்து விட்டார்.
பொய்க் கதைகள்
உண்மை இதுதான். ஆனால் சில தலைவர்கள் எனது தாத்தாவின் பெயரை திட்டமிட்டு அவமரியாதைக்குள்ளாக்கி வருகிறார்கள்.
1996ல் நடந்தது என்ன?
1991 முதல் 1996 வரை தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்தது. 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில் அனுதாப அலை மூலம் காங்கிரஸின் துணையோடு தனி மெஜாரிட்டி பெற்று ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார். அவர் முதல்வரானது இதுவே முதல் முறையாகும்.
கெட்ட பெயர் சம்பாதித்த ஜெயலலிதா
காங்கிரஸால் கிடைத்த லாபத்தை வைத்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா பின்னர் காங்கிரஸை கண்டு கொள்ளவில்லை. உதாசீனப்படுத்தினார். மேலும் ஆட்சியின் கடைசி காலத்தில் அவர் பெரும் கெட்ட பெயரை மக்கள் மத்தியில் சம்பாதித்திருந்தார். ஊழல் புகார்கள், சசி குடும்பத்து ஆதிக்கம், அட்டகாசம், சுதாகரன் ஆடம்பரத் திருமணம் என ஏகப்பட்ட கெட்ட பெயர்கள்.
ரஜினியுடன் மோதல்
இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே மோதல் வெடித்தது. பாட்ஷா பட வெற்றி விழாவின்போது ரஜினி எதேச்சையாகப் பேசப் போக ரஜினியை வைத்து பாட்ஷா படத்தை எடுத்த ஆர்.எம். வீரப்பன் மீது நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா. இது ரஜினியை கோப்படுத்தி விட்டது.
காரை மறித்து சோதனை
அதேபோல போயஸ் கார்டனில் தனது வீட்டுக்கு ரஜினிகாரில் போய்க் கொண்டிருந்தபோது அவரது காரை மறித்து போலீஸார் சோதனையிட்டதால் மேலும் கோபமடைந்தார் ரஜினி. இத்தனையும் சேர்ந்து ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினியை பேச வைத்தது.
சரியாக பயன்படுத்திய கருணாநிதி
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட திமுக, மூப்பனாரை தன் பக்கம் இழுத்தது. ரஜினியையும் நெருங்கியது. தனது எதிர்ப்பையும் மீறி, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி என்ற முடிவுக்கு காங்கிரஸ் மேலிடம் வந்ததை எதிர்த்த மூப்பனார் காங்கிரஸை விட்டு பிரிந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். காங்கிரஸ் உடைந்தது.
உடைந்த காங்.குடன் அதிமுக கூட்டணி
உடைந்த காங்கிரஸ் கட்சிக்கு அப்போது குமரி அனந்தன் தலைவராக இருந்தார். அக்கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்தது.
ரஜினி - மூப்பனார் பலத்துடன் திமுக கூட்டணி
மறுபக்கம் ரஜினியின் ஆதரவுடன், மூப்பனார் கண்ட தமிழ் மாநில காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது.
வரலாறு காணாத வெற்றி
திமுக- தமாகாவுக்கு ஆதரவாக முதல் முறையாக "அரசியல் வாய்ஸ்" கொடுத்தார் ரஜினி. தமிழகமே திரண்டு வந்து திமுக - தமாகா கூட்டணிக்கு வாக்குகளைக் கொட்டியது. வரலாறு காணாத வெற்றியை திமுக, தமாகா கூட்டணி பெற்றது. அதிமுக பெரும் தோல்வியைத் தழுவியது.
அன்று முதல்
அன்று தொடங்கியது ரஜினியின் "அரசியல் பாதை". ஆனால் இன்று வரை அவர் தன் வழியில் தனி வழியில்தான் போய்க் கொண்டிருக்கிறார்....!