குவெட்டா... இந்த ஆண்டு இதுவரை 38 தாக்குதல்கள்... 227 பேர் பலி!
டெல்லி: பலுசிஸ்தானின் குவெட்டா நகரம் கொதி நிலையில் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 28 தீவிரவாதத் தாக்குதல்களை குவெட்டா கண்டுள்ளது. நேற்று நடந்த உக்கிரமான தாக்குதலில் 57 போலீஸார் கொல்லப்பட்டனர்.
2016ம் ஆண்டில் இதுவரை நடந்த தீவிரவாதத் தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு குவெட்டாவின் பல பகுதிகளில் மொத்தமாக 38 தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் 330 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
நேற்று குவெட்டாவில் உள்ள போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த தாக்குதலில் 57 இளம் போலீஸார் கொல்ல்பபட்டனர். ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
நேற்று நடந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பு காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கல்லூரி தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2006 மற்றும் 2008 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்தக் கல்லூரி தாக்குதலுக்குள்ளானது.
2006ம் ஆண்டு நடந்த தாக்குதலின்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 6 போலீஸார் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலின்போது கல்லூரிக்குள் 6 குண்டுகள் வெடித்தன. அந்தப் பகுதியே அதிர்ந்து.
2008ம் ஆண்டு நடந்த தாக்குதலின்போது ராக்கெட் வீசி்யும், துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் தாக்கினர். அதில் ஒருவர் மட்டும் காயமடைந்தார். உயிரிழப்பு ஏதும் இல்லை. அதே நாளில் குவெட்டா ரயில் நிலையத்திலும் குண்டுவெடித்தது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குவெட்டாவில் ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 73 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வக்கீல் ஒருவருக்கு அஞ்சலி செலுத்த பெரும் திரளான வக்கீல்கள் சென்றிருந்த சமயத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. மருத்துவமனைத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும், ஜமாத் உல் அஹ்ரார் என்ற அமைப்பும் சேர்ந்து பொறுப்பேற்பதாக அறிவித்தன.