பாகிஸ்தான் தின விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வி.கே.சிங் பதவி விலக காங். கோரிக்கை!
டெல்லி: பாகிஸ்தான் தின விழாவில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சி்ங் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் நேற்று முன்தினம் தேசிய தினவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவுத்துறை துணை மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டார். இதுகுறித்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த வி.கே.சிங், மத்திய அரசு ஆணையின்படி கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
பின்னர் வி.கே.சிங் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டபோது, விருப்பமின்றி கடமையாற்றியதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, டுவிட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பாகிஸ்தான் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முந்தைய மத்திய அமைச்சர்கள் மறுத்து விட்டனர். ஆனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அறுவெறுப்பு அடைவதாக வி.கே. சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொடர்பான அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் கண்டு, அறுவெறுப்பு அடைவீர்கள் என்றால், அவர் பதவி விலக வேண்டும் என மணீஷ் திவாரி குறிப்பிட்டுள்ளார்.