நேபாள பூகம்பத்தில் சிக்கியவர்களை மீட்ட விமானப்படை விமானிகள் 2 பேருக்கு வாயு சேனா பதக்கம்
பெங்களூர்: 67வது குடியரசு தினமான இன்று விமானப்படை ஹெலிகாப்டர் விமானிகள் இருவருக்கு வாயு சேனா பத்தகம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை வீரர்கள் விங் கமாண்டர் நிர்மல் குமார் பக்ஷி மற்றும் விங் கமாண்டர் ராஜீவ் தோபல். இருவரும் எம்.ஐ.-17 வி5 ஹெலிகாப்டர் விமானிகள் ஆவர். நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோது மீட்பு பணியில் துணிச்சலுடன் ஈடுபட்ட அவர்கள் இருவருக்கும் இன்று வாயு சேனா பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
நேபாளத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 12ம் தேதி இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டபோது அந்நாட்டு அதிகாரிகள் விங் கமாண்டர் பக்ஷியின் உதவியை நாடினர். உடனே ஹெலிகாப்டருடன் பக்ஷி சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டார்.
மோசமான வானிலையிலும் பக்ஷி சிறப்பாக ஹெலிகாப்டரை இயக்கினார். குறைந்த நேரத்தில் பல்வேறு இடங்களில் இருந்து படுகாயம் அடைந்த 4 குழந்தைகள் உள்பட 9 பேரை பக்ஷி மீட்டார். அவர் நேபாளத்தில் 55 மணிநேரம் ஹெலிகாப்டரை இயக்கி மீட்பு பணியில் ஈடுபட்டார்.
விங் கமாண்டர் ராஜீவ் நேபாளத்தில் நடந்த ஆபரேஷன் மைத்ரியில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். மோசமான வானிலையிலும் அவர் காத்மாண்டு கிளம்பிச் சென்றார். லுக்லாவில் சிக்கித் தவித்த இந்தியாவைச் சேர்ந்த 95 மலையேறும் வீரர்களை அவர் மீட்டார். லாங்தாங் கிராமத்தில் இருந்த ஸ்பெயினைச் சேர்ந்த மீட்பு குழுவை மீட்க ராஜீவ் சென்றார்.
அங்கு சென்ற பிறகு தான் அவர்கள் ஏற்கனவே அங்கிருந்து கிளம்பிவிட்டது தெரியவந்தது. மேலும் அப்போது அங்கு பனிப்புயல் வீசிக் கொண்டிருந்தது. பனிப்புயலிலும் அவர் ஹெலிகாப்டரை இயக்கி ஸ்பெயின் குழுவை கண்டுபிடித்து மீட்டார் என்றார்.