5 நாளில் வந்துவிடுவார் ராகுல் காந்தி... சொல்வது கமல்நாத்!
நாக்பூர்: அரசியல் பணிகளுக்கு திடீரென லீவ் போட்டுவிட்டு தலைமறைவாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 5 நாட்களில் மீண்டும் கட்சிப் பணியாற்ற வந்துவிடுவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் 4 வார காலம் லீவு கேட்டுவிட்டு திடீரென தலைமறைவானார் ராகுல் காந்தி. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ராகுல் காந்தி லீவு போட்டுவிட்டு எங்கேயோ போய் தலைமறைவானது பெரும் சர்ச்சையானது.
காங்கிரஸ் தலைவர் பதவியைக் கேட்டு அடம்பிடித்துதான் கோபத்தில் போய்விட்டார்; காங்கிரஸில் பிரியங்கா காந்திக்கு முக்கியத்துவம் தரப்போகிறார்கள் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே ராகுல் ஓய்வில் போய்விட்டார் என்றும் கூறப்பட்டது.
அத்துடன் உத்தரகாண்ட்டில் டெண்ட் போட்டு தங்கியிருக்கிறார்... தாய்லாந்துக்கு போய்விட்டார் என்றெல்லாம் தகவல்கள் பரபரத்தன.. சோனியாவிடமும் பத்திரிகையாளர்கள் தினமும் இதையே கேள்வியாக கேட்க அவரும் எரிந்து எரிந்து விழுந்தார்.
மேலும் ஏப்ரல் மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க இருக்கிறார்.. அதற்காகத்தான் இந்த தற்காலிக ஓய்வு என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவரும் சோனியா குடும்பத்துக்கு மிக நெருக்கமானவருமான கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், 5 நாட்களில் ராகுல் காந்தி மீண்டும் கட்சிப் பணிகளுக்கு திரும்பிவிடுவார்.. தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஆக்கப்பூர்வமாக அவர் செயல்படுவார் என்று கூறியிருக்கிறார்.