டுவிட்டருக்கும் வந்தார் ராகுல் காந்தி.. சுற்றுப்பயணம் குறித்து முதல் டுவிட்!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார்.
முதல் டுவிட்டாக ‘இந்தப் பக்கத்தில் ராகுல் காந்தியின் அலுவல் நிகழ்ச்சிகள் மற்றும் எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும்' என பதிவு செய்யப்பட்டது.
இந்த டுவிட்டர் பக்கமானது ராகுல் காந்தி அலுவலகத்தின் பெயரில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டத்தில், 5 கிராமங்களில் 15 கிமீ தொலைவு அளவுக்கு ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள பாதயாத்திரை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாடிவால் கிராமத்திலிருந்து தனது பாதயாத்திரையைத் தொடங்குகிறார் ராகுல் காந்தி.
அதனைத் தொடர்ந்து ராகுலின் இன்றைய லோக்சபா பேச்சு குறித்த செய்தியும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ராகுலின் இந்த டுவிட்டர் பக்கத்திற்கு இதுவரை இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாலோயர்களாகி உள்ளனர்.
முன்னதாக இந்த டுவிட்டர் பக்கம் தொங்கப்பட்ட பின்னர் டுவிட் எதுவும் போடப்படாமல் இருந்தது. இதனால் இது ராகுல் காந்தியின் பக்கம்தானா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது.
இதுவரை சமூக வலைதளங்கள் பக்கம் வராமல் இருந்து வந்தார் ராகுல் காந்தி. அதேசமயம், பிரதமர் மோடியோ டுவிட்டரில் படு பிசியாக இருப்பவர். அவருக்கு 12 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், ராகுலின் டுவிட்டர் குறித்து கிண்டலடிக்கவும் சிலர் தயங்கவில்லை. ஒருவர் இப்படிப் போட்டுள்ளார் ராகுல் காந்தி டுவிட்டருக்கு வந்து விட்டார். உங்களது ஜோக்குகளை நேரடியாக இங்கேயே அனுப்பலாம் என்று கலாய்த்துள்ளார்.