பிரதமர் மோடி பலவீனமானவர்... காங். துணைத் தலைவர் ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு
பிரதமர் மோடி பலவீனமானவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடி பலவீனமானவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்ற ஜூன் மாதம் 26ம் தேதி, ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க தலைவன் சையது சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதி என குறிப்பிட்டு அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது. அதில் காஷ்மீரை இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் என தெளிவாக அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து விளக்கம் அளித்த மத்திய உளவுத்துறை, ' இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை குறிப்பிடுவதற்காகவே அமெரிக்கா இந்த சொல்லை பயன்படுத்தியதாக கூறியிருந்தது.
கடந்த 2010 - 13ம் ஆண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதும் அமெரிக்கா இந்த சொல்லை பயன்படுத்தி உள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியிருந்தது.
இந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ள ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்காவின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு மௌனமாக இருக்கிறது. இது பிரதமர் மோடி பலவீனமானவர் என்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.