உபி. தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ராகுல் காந்தி? சோனியாவின் அதிரடி வியூகம்!!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிறுத்தப்படக் கூடும் என கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க சமாஜ்வாடியும் ஆட்சியை எப்படியும் கைப்பற்றுவதென பகுஜன் சமாஜ் மற்றும் பாஜகவும் வியூகம் வகுத்து வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தை நீண்டகாலம் தமது பிடியில் வைத்திருந்த காங்கிரஸும் முட்டி மோதி ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக களமிறக்க சோனியா திட்டமிட்டுள்ளாராம்.
பிரசாந்த் கிஷோர் வியூகம்
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் இந்த முயற்சிக்கு பின்னணியில் இருப்பதே தேர்தல் வியூக வல்லுநர் என பெயரெடுத்த பிரசாந்த் கிஷோர்தானாம். பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோரை அரியணையில் அமர்த்த வியூகம் வகுத்துக் கொடுத்தவர்தான் இந்த பிரசாந்த் கிஷோர் என்பது நினைவிருக்கலாம்.
லோக்சபா தேர்தலுக்கு அடித்தளம்
இந்த அதிரடி முயற்சி கை கொடுத்தால் இதையே அடிப்படையாக வைத்து 2019 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்பதும் சோனியாவின் கணக்கு. ஆனால் இதுகுறித்து ராகுல் காந்தி எந்த ஒரு கருத்தையுமே தெரிவிக்க முன்வரவில்லை.
பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி முன்வராத நிலையில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக்கலாம் எனவும் பரிந்துரைத்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். இதனையும் காங்கிரஸ் மேலிடம் ஏற்று மும்முரமாக களமிறங்குகிறதாம்.
ஷீலா தீட்சித்
இதை இருவருமே நிராகரித்தால் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை உத்தரப்பிரதேச முதல்வர் வேட்பாளராக களமிறக்கவும் ப்ளான் பியையும் கையில் வைத்திருக்கிறது காங்கிரஸ் மேலிடம். ராகுல் காந்தி அல்லது பிரியங்காவை முன்னிறுத்தினால் காங்கிரஸ் எதிர்பாராத வெற்றியை நோக்கிச் செல்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறது என்கின்றனர் பெரும்பாலான அரசியல் பார்வையாளர்கள்.