அரசியலைவிட்டு ராகுல் ஓடிப் போகவில்லை..திரும்பி வருவார்: திக் விஜய் சிங்
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அரசியலை விட்டு ஓடிப் போகவில்லை. கட்சியை வழிநடத்த அவர் திரும்பி வருவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளிலிருந்து இரு வாரங்கள் விடுப்பில் எடுத்துச் சென்றதாக அண்மையில் காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதனால் ராகுல் காந்தி எங்கே என்ற கேள்வி எழுந்தது.
அவர் தாய்லாந்து சென்றுவிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் உத்தர்காண்ட்டில் டென்ட் போட்டு ஓய்வு எடுத்து வருவதாகவும் புகைப்படங்கள் வெளியாகின. மேலும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ராகுல் காந்தி 'லீவில்' சென்றது பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியது.
இந்நிலையில் ராகுல் காந்தி உத்தர்காண்ட்டில் இருப்பதாக வெளியான செய்திகளை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ராகுல் காந்தி எங்கு இருக்கிறார் என்பது குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் தவறு என்றார்.
மேலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், ராகுல் காந்தி ஆற்றல் கொண்டவர். அவர் அரசியலை விட்டு எங்கும் ஓடிப் போகவில்லை. கட்சியை வழிநடத்த அவர் திரும்பி வருவார் என்றும் கூறியுள்ளார்.