டெலிகேட் பொசிசன்..ஒரே டென்சன்..2 மாதமாக மியான்மரில் ராகுல்காந்தி தியானம் செய்தாராமே!
டெல்லி: நாடாளுமன்றத்தில், பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி தொடங்க இருந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி திடீர் என்று விடுமுறையில் சென்றார். அவர் மியான்மரில் தங்கியிருந்து தியானம் செய்த புதுத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ராகுல்காந்தி ஓய்வு எடுப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். ராகுல்காந்தி கட்சிப் பணியை துறந்து விடுமுறையில் சென்றது பல்வேறு யூகங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. ராகுல் காந்தி எந்த இடத்தில் இருக்கிறார் என்றும் தெரியாததால் இந்த சர்ச்சை மேலும் வலுத்தது.
நேற்று ரிட்டர்ன்
இதற்கிடையே 2 மாத ஓய்வுக்குப் பின் ராகுல்காந்தி நேற்று காலை 11.15 மணிக்கு டெல்லி திரும்பினார். அவர் தாய்லாந்து நாட்டின் ‘தாய் ஏர்வேஸ்' விமானத்தில் டெல்லி வந்தார். அவரது விமானம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்காமல் விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய பாலம் விமான நிலையத்தில் தரை இறங்கியது.
எந்த நாடு
ராகுல் டெல்லி திரும்பியதன் மூலம் 2 மாதமாக நீடித்து வந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. என்றாலும் அவர் எந்த நாட்டில் தங்கி இருந்தார் என்ற மர்மம் நீடிக்கிறது. இது பற்றி காங்கிரஸ் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
தியானம்
என்றாலும் அவர் மியான்மர் நாட்டில் 2 மாதம் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் தலைநகர் யங்கூனில் புகழ் பெற்ற தியான மையம் உள்ளது. மன அமைதிக்காக பிரபலங்கள் இங்கு வந்து தங்கி தியானம் இருந்து செல்வது வழக்கம்.
பாதுகாப்பு கழற்றப்பட்டது
ராகுல்காந்தி இங்கு 2 மாதம் தங்கி மன அமைதிக்கான தியானம் செய்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறிய ராகுல்காந்தி யங்கூன் சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. ராகுல்காந்திக்கு மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு அளித்து வருகிறது. அவர் யங்கூனில் தங்கி இருந்தபோது சிறப்பு பாதுகாப்பு படை அளிக்கப்படவில்லை. பாதுகாப்பு இல்லாமலேயே அவர் யங்கூனில் தங்கி இருந்தார். இதனால்தான் அவர் எங்கு இருக்கிறார் என்பது வெளியில் தெரியவில்லை.
விமானம் தாமதம்
மேலும் ராகுல்காந்தி யாருக்கும் தெரியாமல் நேற்றைய தினம் இரவே டெல்லி திரும்ப திட்டமிட்டார். ஆனால் ராகுல்காந்தி பயணம் செய்ய இருந்த விமானம் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து தாமதமாக யங்கூன் வந்ததால் நேற்று காலையில் தான் டெல்லி திரும்பினார்.ராகுல்காந்தி யங்கூனில் தங்கி இருந்தபோது அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மியான்மர் நாடு வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.