மனைவியுடன் நாடு திரும்புவார் ராகுல்காந்தி... தீயாய் பரவிய வதந்தி
டெல்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ரகசிய திருமணம் செய்துள்ளதாகவும், அவர் டெல்லி திரும்பும்போது தனது மனைவியையும் அழைத்து வருவார் என பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த வதந்தியை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கட்சிப் பணிக்கு விடுமுறை எடுத்திருப்பதாக கடந்த மாதம் சோனியா அறிவித்திருந்தார். ஆனால், ராகுல் காந்தி எப்போது திரும்புவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், ஒரு மாத காலமாக தங்களது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுலைக் காணவில்லை என்றும், ராகுலை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அமேதி தொகுதியில் சமீபத்தில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டிருந்தது.
மனைவியுடன் திரும்புவார்
இந்நிலையில், தனக்கு நெருக்கமான வெளிநாட்டு பெண் ஒருவரை ராகுல் காந்தி ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும், அவர் டெல்லிக்கு திரும்பும்போது தனது மனைவியையும் அழைத்து வருவார் என டெல்லியில் காட்டுத்தீயாக வதந்தி பரவியது.
காங்கிரஸ் கட்சி மறுப்பு
இதை மறுத்துள்ள காங்கிரசார், ஆர்.எஸ்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்பியுள்ளனர் எனக் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் 19ஆம் தேதி நடக்கும் விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
ஸ்பெயின் காதலி
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்திக்கு 44 வயதாகிறது. இன்னும் அவர் திருமணம் செய்யவில்லை. ராகுல்காந்தி முன்பு ஸ்பெயின் நாட்டு பெண் பெரோனிகாவை காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று அப்போது பேச்சு அடிபட்டது. ஆனால் ராகுல் எதிர்பார்த்தப்படி அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும் மர்மமாக இருந்தது.
திருமண வதந்திகள்
44 வயதாகும் ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழுகிறது.
ராகுல் அறிவிக்க வேண்டும்
எத்தனையோ கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லும் ராகுல் திருமணம் பற்றி கேள்வி கேட்டால் மட்டும் அதற்கு மழுப்பலாகவே பதில் சொல்லி வந்தார். ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லவேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.