ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக
டெல்லி: மோடி அரசுக்கு மக்கள் அளித்த தீர்ப்பை ராகுல் காந்தி கிண்டல் செய்து அவமானப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நில சீர்திருத்த மசோதா குறித்த தெரிவித்துள்ள கருத்துக்கள் மக்கள் தீர்ப்பை கேலி செய்வது போல உள்ளது, அவமதிப்பது போல உள்ளது.
அவர்கள் பேசியுள்ள அனைத்துமே பச்சைப் பொய்களாகும். குஜராத் மாடல் குறித்து அவர்கள் பேசுகிறார்கள். நாங்களும் கேட்கிறோம், வதேரா மாடல் குறித்து அவர்களால் விளக்க முடியுமா?
இன்னும் எத்தனை முறைதான் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை ரீலான்ச் செய்யப் போகிறது. ஒவ்வொரு தேர்தல் தோல்விக்குப் பிறகும் அவர் ஓடிப் போவது வழக்கமாகி வருகிறது.
30 வருடங்களுக்குப் பிறகு மக்கள் இந்த நாட்டில் தெளிவான தீர்ப்பைக் கொடுத்துள்ளனர். ஆனால் அதை ராகுல் காந்தி விமர்சிக்கிறார். இதற்காக மக்களிடம் ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
மக்கள் தீர்ப்பை இப்படி பகிரங்கமாக அவமதித்த செயலை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. இந்தியா சர்வாதிகார நாடு இல்லை என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும். இது மக்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படும் நாடு.
டோரண்டோவில் பிரதமர் பேசியது எப்படி நாட்டை அவமதிக்கும் செயலாகும். 2ஜி அவமதிக்கவில்லையா, நிலக்கரி ஊழல் இந்த நாட்டை அவமதிக்கவில்லையா. அதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில்தானே நடந்தது.
ஸ்கேம் இந்தியா என்ற நிலையை டிரான்ஸ்பரென்ட் இந்தியா என்று பாஜக மாற்றி வருகிறது என்றார் பிரசாத்.