நில அபகரிப்பு போல மீனவர்களிடம் இருந்து கடலை கபளீகரம் செய்யப் போகிறது மோடி அரசு: சொல்வது ராகுல்
திருச்சூர்: நில ஆர்ஜித மசோதா மூலம் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிக்கும் மோடி அரசு தற்போது மீனவர்களிடம் இருந்து கடலையும் அபகரிக்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் மீனவர்கள் மத்தியில் இன்று ராகுல் காந்தி பேசியதாவது:
இன்று எனக்கு பரிமாறப்பட்ட மீன் உணவு, மீண்டும் என்னை இங்கு வரவழைக்கும் என நினைக்கின்றேன். நிலம் என்பது விவசாயிகளுக்கு பெருமதிப்புமிக்க ஒரு சொத்தாகும். ஏறத்தாழ 50 முதல் 60 ஆண்டுகளாகவே இந்த பூமியில் அவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு பொறுப்பேற்ற பா.ஜ.க. அரசு விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இதை ஏற்காது. இதனால் தான் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வருகிறோம்.
இந்திய நிலங்கள் தங்கத்தை போன்றது. அதனால் அவற்றை தங்கள் நண்பர்களுக்கு கொடுக்க பா.ஜ.க. அரசு முனைகிறது. இதற்காகவே விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் சட்டங்களை அழிக்க மத்திய அரசு முயல்கிறது.
இதைப்போலவே மீனவர்களிடமிருந்து கடலை பறித்து பன்னாட்டு நிறுவனங்களிடம் வழங்க அரசு நினைக்கிறது. அரசின் இந்த எண்ணத்தை தடுக்கும் விதமாக விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி உறுதியாக போராடும்
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.