ஆர்.எஸ்.எஸிடம் மன்னிப்பு கேட்க முடியாது.... எனது போராட்டம் தொடரும்...ட்விட்டரில் ராகுல்காந்தி பதிலடி
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் தாம் மன்னிப்பு கேட்க முடியாது...அந்த இயக்கத்துக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதற்காக அவர் மீது ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை போலீசார் விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனால் உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிடுகையில், மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என ராகுல் காந்தி ஒருபோதும் பேசவில்லை, அந்த அமைப்பை சேர்ந்த ஒருவருக்கு தான் இதில் தொடர்பு இருந்தது என பேசினார் என்றார்.
I will never stop fighting the hateful & divisive agenda of the RSS. I stand by every single word I saidhttps://t.co/bUWzTHrgHW
— Office of RG (@OfficeOfRG) August 25, 2016
இதை கேட்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஸ்.நாரிமன் ஆகியோர் ராகுல் காந்தி கூறியதை எப்படி எடுத்துக்கொள்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. எனினும் ராகுல் காந்தியின் பதிலை ஏற்று வழக்கு தொடர்ந்தவர்கள் தங்கள் மனுவை முடித்து கொள்ள விரும்புகிறார்களா? என கேட்டு நீதிபதிகள், இந்த வழக்கை 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் என குற்றம்சாட்டி பேசியது தவறு என்று ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது
இதற்கு பதிலடியாக "ஆர்.எஸ்.எஸ்.-ன் வெறுப்பு மற்றும் பிரித்தாளும் நடவடிக்கைக்கு எதிரான எனது போராட்டத்தை நிறுத்த போவதில்லை. நான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை" என்று பதிலடி கொடுத்துள்ளார் ராகுல்.