இன்னும் 20 நாளுக்கு ராகுல் அரசியலுக்கு வரமாட்டாராமே...
டெல்லி: உலகத்திலேயே அரசியலுக்கு லீவ் போட்டுவிட்டு ஓய்வெடுக்கப் போன முதல் தலைவரான காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்னும் 20 நாட்களுக்கு லீவை நீட்டித்துள்ளாராம். நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ள பேரணியில் ராகுல் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் அரசியல் தலைமைத்துவ பயிற்சிக்காக எனக் கூறி லீவில் சென்றுவிட்டார் ராகுல் காந்தி. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவி கிடைக்காத காரணத்தால் கோபித்துக் கொண்டு ராகுல் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் ராகுல் ஒரு வாரத்தில் திரும்பிவிடுவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் ராகுல் அரசியலுக்கு வரவே இல்லை.
அண்மையில் கூட நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக டெல்லி குலுங்க காங்கிரஸ் பேரணி நடத்தியது. இப்பேரணியில் போலீசார் தடியடி நடத்தியும் இருந்தனர். இப்பேரணிக்கு ராகுல் தலைமை வகிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் கடைசிவரை ராகுல் வரவே இல்லை. காங்கிரசாரும் ராகுல் இதோ வந்துவிடுவார் என்று பல முறை கூறி சலித்துப் போய்விட்டனர்.
இந்நிலையில் தற்போது ஏப்ரல் 19-ந் தேதியன்று ராகுல் காந்தி மீண்டும் அரசியலுக்கு வந்துவிடுவார் எனக் கூறப்படுகிறது.
இப்போதும் கூட ஏப்ரல் 19-ந் தேதியன்று காங்கிரஸ் கட்சியினர் நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதால் ராகுல் வந்துவிடுவார் எனக் கூறப்படுகிறது.
வருவார்.. ஆனா வரமாட்டாரா?