உங்களுக்கு கெடச்சுதா 15 காசு? மோடி போட்டிக்காரு 15 லட்சம் கோட்டு:டெல்லி பிரசாரத்தில் ராகுல் 'பொளேர்'
டெல்லி: கறுப்புப் பணத்தை மீட்டு மக்களின் வங்கிக் கணக்கில் ரூ15 லட்சம் போடுவேன் என்று கூறிய பிரதமர் மோடி தன்னுடைய கோட் சூட்டுக்கு மட்டும் 15 லட்சம் ரூபாய் செலவு செய்து கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
நீங்கள் வேலைவாய்ப்பைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.. பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறீர்கள்..
ஆனால் பிரதமர் மோடியோ உங்களிடம் துடைப்பத்தைக் கொடுத்து தூய்மைப்படுத்த சொல்கிறார்...
கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து உங்களது வங்கிக் கணக்கில் ரூ15 லட்சம் பணத்தைப் போடுவேன் என்று மோடி கூறினார்... நீங்கள் யாரேனும் 15 பைசாவாது பெற்றிருப்பீர்களா?
உங்களுக்கு ரூ15 லட்சம் கிடைக்கவில்லை.. ஆனால் மோடிஜியோ ரூ15 லட்சம் மதிப்பிலான சூட் அணிந்து கொண்டிருக்கிறார்...
பாரதிய ஜனதாவும் ஆம் ஆத்மியும் காங்கிரஸை பலவீனப்படுத்தி இந்த நாட்டில் சிறுபான்மையினரே இல்லாத ஒரு நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியானது தொழிலதிபர்களுக்கு ஆதரவானது.. ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுக்கு ஆதரவாக இருக்கும். இந்த நாட்டில் காங்கிரசைத் தவிர ஏழைகளைப் பிரதிநிதிபடுத்த யாரும் இல்லை..
அமெரிக்காவுடன் மோடி அரசு அணு உலை ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் அமெரிக்கா அமைக்கும் அணு உலையில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அமெரிக்கா நிறுவனங்கள் எந்த நட்ட ஈட்டையும் தராது. இந்திய அரசுதான் நட்ட ஈட்டைத் தரப்போகிறது.. இதுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்.
இதனால் பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி ஆகிய இரு சந்தர்ப்பவாத கட்சிகளைப் புறக்கணியுங்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.