கேதார்நாத் கோவிலுக்கு ராகுல் காந்தி திடீர் பயணம்!
டேராடூன்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக அனல் பறக்கப் பேசி வந்த நிலையில் தற்போது ஆன்மீக பயணத்தில் குதித்துள்ளார். கேதார்நாத்துக்கு அவர் சாமி கும்பிடச் சென்றுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி மிகவும் தொய்ந்து போனது. ராகுல் காந்தியும் அமைதியாக இருந்து வந்தார். திடீரென சமீபத்தில் அரசியலுக்கு விடுமுறை என்று அறிவித்து விட்டு கிளம்பிச் சென்றார். அவர் எங்கு போனார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் 55 நாள் விடுமுறைக்குப் பின்னர் திரும்பி வந்த அவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் கடந்த 2 நாட்களாக புயல் கிளப்பி வருகிறார்.
டெல்லியில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் ஆவேசமாகப் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் மோடி அரசையும், மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக சாடிப் பேசி அனைவரையும் கவர்ந்தார். பாஜக தரப்பே கூட ராகுல் காந்திக்கு திடீரென இப்படி ஒரு வேகம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை.
இந்த நிலையில் நேற்று திடீரென அவர் கேதார்நாத் கோவிலுக்குக் கிளம்பிச் சென்றுள்ளார். சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் 11வது ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது கேதர்நாத் தலமாகும். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்ற அவர், உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள ஜாலிகிராண்ட் விமான நிலையத்தை வந்தடைந்த ராகுல் காந்திக்கு, முதல்வர் ஹரிஷ் ராவாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டு கேதர்நாத்தில் நடந்த மழை வெள்ளத்தில் கேதர்நாத் கோவில் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. தற்போது அங்கு மேற்கொண்டுள்ள சீரமைப்பு பணிகள் பற்றிய படங்களை ராகுல்காந்தி பார்வையிட்டார். பின்னர், ஜாலிகிராண்ட் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கவுரிகாந்திற்கு ராகுல் காந்தி புறப்பட்டார். அவருடன் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அம்பிகாசோனி, மாநிலத்தலைவர் கிஷோர் உபத்யாயா மற்றும் மூத்த தலைவர்கள் சென்றனர். கவுரிகாந்த் சென்ற ராகுல்காந்தி, அங்குள்ள லின்சோலி பகுதியில் இருந்து கேதர்நாத் செல்கிறார். அவர் இன்று காலை சாமி தரிசனம் செய்கிறார்.