பாதுகாப்பிற்காக பெண்கள் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு!
டெல்லி : ரயில் பயணத்தின் போது பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெண்கள் பெட்டிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் எனவும், இதற்கு நிர்பயா நிதி பயன்படுத்தப்படும் எனவும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு பெண்களின் பாதுகாப்பிற்கென நிர்பயா நிதி என்ற பெயரில் நிதி ஒதுக்கியது. ஆனால், அந்த ரூ.1,000 கோடி நிர்பயா நிதி தொடர்ந்து பயன்படுத்தப் படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், சமீபகாலமாக ரயில் பயணங்களின் போது சில ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஆண் பயணிகளால் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைகளுக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்களைத் தடுக்கும் வகையில் இந்த ரயில்வே பட்ஜெட்டில் பெண்களின் பாதுகாப்பு சம்பந்தமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது.
அதன்படி, 2015- 16ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பெண் பயணிகள் பாதுகாப்புக்கு நிர்பயா நிதி பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். ஆனால், இந்த நிர்பயா நிதியான ரூ. 1000 கோடியில் இருந்து எவ்வளவு பணம் இதற்கென செலவு செய்யப்படும் என அவர் கூறவில்லை.
அதேபோல், ரயில்வேயில் தூய்மை பராமரிப்பு பணியை மேற்கொள்ள வெளி நிறுவன உதவி நாடப்படும் என்றும், பாதுகாப்புக்காக பெண்கள் பெட்டியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்' என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
முதல் கட்டமாக சில முக்கிய ரயில்கள், புறநகர் ரயில்களின் பெண்கள் பெட்டிகளில் இந்த கேமராக்கள் அமைக்கப்படும்.
மேலும், நாடு முழுவதும் 24 மணி நேர ரயில்வே பயணிகள் குறைதீர்க்கும் 138 அவசர அழைப்பு சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.