ரயில் பயணிகளின் பர்சை சுட வருகிறது அறிவிப்பு....கட்டணத்தை உயர்த்த பிரதமர் ஒப்புதல்!
இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில் டிக்கெட் கட்டணம் உயரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன, இந்த முடிவிற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
புதுடில்லி : ரயில் பயண டிக்கெட் கட்டணம் செப்டம்பர் மாதம் முதல் உயரும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெடுந்தூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் விரும்புவது ரயில் போக்குவரத்தையே. பயண இடர்பாடுகள் இருக்காது, சௌகரியம் என்பது இதற்கான முக்கிய காரணங்கள். மேலும் பயணச் செலவு குறைவு என்பதும் மற்றொரு முக்கிய காரணம். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் ரயில் கட்டணம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்திற்கு முன்னர் டெல்லியில் ரயில்வேத்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் தெரிய வந்துள்ளன. இந்தக் கூட்டத்தில் கட்டணத்தை உயர்த்த பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நிதி நெருக்கடி
இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில் பயணிகள் ரயில் சேவை மூலம் 57 சதவீத வருமானமும், புறநகர் ரயில் சேவை மூலம் 37 சதவீத வருவாயும் கிடைக்கிறது. ஆனால் மக்கள் அதிக அளவில் அன்றாடம் பயன்படுத்தி வரும் ரயில்களை பராமரிப்பதில் சிக்கல் இருக்கிறது. மேலும் ஊழியர் சம்பளம், ரயில் பெட்டிகளை தூய்மையாக பராமரிப்பது உள்ளிட்டவற்றிற்காக ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
வேறு வழியில்லை
இது மட்டுமின்றி ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் கேட் அமைப்பது, ரயில் பெட்டிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றிற்காக நிதி இல்லாமல் தடுமாறி வருவதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் ரயில்வே துறையை நஷ்டத்தில் இருந்து காக்க கட்டண உயர்வு கட்டாயமாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் ஒப்புதல்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் ரயில் கட்டணத்தை உயர்த்த பச்சைக் கொடி காட்டியுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் கட்டண உயர்வு எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
எவ்வளவு கட்டணம்?
தற்போதைய நிலையில் ஏசி 3ம் வகுப்பு சேவையின் மூலம் மட்டுமே ரயில்வேக்கு கணிசமான லாபம் வருவதாக கூறப்படுகிறது. எனவே கட்டண உயர்வு இதைத் தவிர்த்து மற்ற வகுப்புப் பயண டிக்கெட்டுகளுக்கு அறிவிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.