ரயில்களில் பெண்கள், மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்: ரயில் நிலையங்களில் வீல் சேர்கள்..
டெல்லி: ரயில்வே பட்ஜெட்டில், பெண்கள் மூத்த குடிமக்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளார் அமைச்சர் சுரேஷ் பிரபு. படுக்கை வசதி, வீல்சேர் வசதி ஆகியவைகளைப் பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர்.
ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே கடவுளை வேண்டிக்கொள்கின்றனர். ஏனெனில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்களுக்கு டிக்கெட் போடும் போது லோயர் பெர்த் ஆக கிடைக்கவேண்டுமே என்பதுதான் அந்த வேண்டுதல்.
ஆனால் வயது, பாலினம் எல்லாம் குறிப்பிட்டும் ஒதுக்கப்படுவது என்னவோ அப்பர் பெர்த்தான். எத்தனை பேரால் ஏறி இறங்க முடியும். ரயிலில் ஏறி லோயர் பெர்த் ஆசாமிகளை கெஞ்சிக் கூத்தாடி இடம் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
அதைவிட மிகப்பெரிய சிரமம் மூத்த குடிமக்களையும், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ரயில் ஏறச் செல்வதே பாகீரத பிரயத்தனமாக இருக்கிறது. இதற்கும் ஒரு விடிவுகாலம் பிறந்திருக்கிறது இந்த ரயில்வே பட்ஜெட்டில்.
வீல்சேர்கள்
வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர் வசதிக்காக வீல் சேர்களை ஆன்லைனில் புக் செய்து கொள்ளும் வசதி. முதியோர் ஊனமுற்றோருக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு
கர்ப்பிணிகளுக்கு ரயில்களில் கீழ் படுக்கை வசதி கிடைக்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு
ரயில்களில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது. பெண்கள் பாலியால் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பெண்களின் பாதுகாப்பிற்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்பயா நிதி
ரயிலில் பயணிக்கு பெண்கள் பாதுகாப்பான திட்டங்களுக்காக 'நிர்பயா நிதி' பயன்படுத்தப்படும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புறநகர் ரயில்களிலும், குறிப்பிட்ட தடங்களில் செல்லும் பயணிகள் ரயில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.
நிம்மதியான பயணம்
ரயில்வே அமைச்சரின் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ரயில் பயணம் பெண்களுக்கும், மூத்த குடிமக்கள், குழந்தைகளுக்கு நிம்மதியான பயணமாக அமையும் என்கின்றனர் பயணிகள்.
பச்சிளம் குழந்தைகளுக்கு
இதேபோல பச்சிளம் குழந்தைகளுடன் ரயிலில் பயணிக்கும் தாய்மார்களுக்கு தற்காலிகமாக தொட்டில் வழங்கினால் கூடுதல் சவுகரியம் என்பது பயணிகளின் கோரிக்கையாகும்.