தனியாருடன் கைகோர்க்கும் ரயில்வே நிர்வாகம்- சாதகமா, பாதகமா?
டெல்லி: இந்தியாவில் மோடி தலைமையிலான அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் இன்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பட்ஜெட்டின் ஒரு பகுதியாக ரயில்வே துறையானது தனியாருடன் கைகோர்க்க உள்ளது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர்.
அவ்வாறு, ரயில்வே துறை தனியார் மயமானால் பல்வேறு சாதக, பாதகங்களை அத்துறை மட்டுமல்லாது மக்களும் சந்திக்க வேண்டி வரும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
தனியார் மயமாக்குதல் என்றால் என்ன?
அரசினால் செயல்பட்டு வருகின்ற மக்கள் நலன் திட்டங்களில், தனியார் நிறுவனங்களும் பங்கேற்கும் வகையிலும், அரசின் நிதி இழப்பினை சரிகட்டும் வகையிலும் சில பகுதி சேவைகளை காண்ட்ராக்ட் அடிப்படையில் அவற்றிற்கு வழங்குவதுதான் தனியார் மயமாக்கல்.
இந்திய ரயில்வே துறையினைப் பொறுத்த வரையில் சுமார் 16 லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொறியாளர்கள், அதிகாரிகள் பணிகள் எண்ணிக்கையைத் தவிர அதிக அளவிலான அடித்தட்டு ஊழியர்கள்தான்.
அதேபோன்று ரயில் சேவையைப் பயன்படுத்துபவர்களில் 100ல் 90 சதவீதத்தினர் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள்தான். இந்நிலையில் ரயில்வே துறை தனியாருடன் கைகோர்க்கின்றோம் என்ற அடியை எடுத்து வைக்கும்போது முதலில் பலத்த அடியினைப் பெறப் போவது ரயில்வேயின் அடித்தட்டு ஊழியர்கள்தான்.
தனியார் மயம் என்ற நிலையில் முதலில், ரயிலில் சுத்தப் படுத்தும் பணி, உணவு வழங்கள் பணி போன்ற பணிகளில் இருக்கின்ற ஊழியர்களை கட்டாய பணிநீக்கம் செய்யப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் உள்ளே நுழைகின்ற தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
அப்படி பணியமர்த்தப்பட்டால் தற்போதைய ஊழியர்கள் எண்ணிக்கையை விட குறைந்த அளவிலான ஊழியர்களே பணியமர்த்தப்படுவார்கள். இதனால் ரயில்களின் பரமாரிப்பு பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும். மேலும், ஊழியர்களை பணிக்குறைவால் நீக்கம் செய்யும் உரிமையும் தனியார் கைகளுக்கே சென்றுவிடும்.
ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படும்போது, பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்ற பல லட்சம் ஊழியர்கள் வேலையை இழக்கின்ற அபாயம் ஏற்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு நிரந்தரமில்லாத பணி சூழ்நிலையே நிலவும்.
தனியார் மயமாக்கலின் சாதகங்கள்:
சாதகங்கள் என்ற வகையில் பார்த்தால் அரசின் நிதி நிலைமை மேம்படும். ரயில்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை மேற்கொள்ளும்போது அவற்றில் ஒப்பந்த அடிப்படையிலான தனியாரின் செயல்பாடுகளால், ஒவ்வொரு ரயில்களின் வசதியையும் தனியாக கவனிக்க முடியும்.
மேலும், உணவு நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களால் தேவையான உணவு வகைகளை மக்கள் பெற முடியும். இது நீண்ட தொலைவு பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு வசதியான ஒன்றாக இருக்கும்.
மொத்தத்தில் ரயில்வே துறையானது தனியாருடன் கைகோர்த்தால் சாதகங்களை விட பாதகங்களே அதிகம். மேலும், பல்வேறு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.