ரயில் பயணத்திற்கு இனி 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்!
டெல்லி: ரயில்களில் டிக்கெட் முன்பதிவை இனிமேல் 120 நாட்களுக்கு முன்பே செய்யலாம் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் 2015-2016 நிதியாண்டிற்காக ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் இதனை அறிவித்தார்.
ரயில்களில் வெளியூர் செல்வோர் இப்போது 60 நாட்களுக்கு முன் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆனால், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இனி 60 நாட்களுக்கு பதிலாக 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மொபைல் அப்ளிகேசன்ஸ்
மார்ச்-1 முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ். நாடு முழுமைக்கும் ரயில்வே உதவி எண் 138 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் குறை தீர் மையங்கள் செயல்படும்.
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்
ஸ்மார்ட் போன் மூலமும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டம். சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலீடுகள்
ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ரயில்வேயில் அதிக முதலீட்டால் வேலை வாய்ப்பு பெருகும்.
உள்கட்டமைப்பு வசதிகள்
9 வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படும். சிறப்பான விளக்கு வசதியுடன் ரயில் பெட்டிகளின் உள் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படும். 9,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்படும். புறநகர் பயணிகளுக்காக முக்கிய நகர்களில் சாட்டிலைட் முனையம் ஏற்படுத்தப்படும்.
கீழ் படுக்கை வசதி
முக்கிய ரயில்களின் படுக்கை வசதி எண்ணிக்கை உயர்த்தப்படும். வயதான பயணிகள், கர்ப்பிணிகளுக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க வகை செய்யப்படும் என்றார்.
ஏன் இந்த மாற்றம்
ரயிலில் பயணம் செய்வதற்கு, 120 நாட்கள் வரை, முன்பதிவு செய்து கொள்ளும் வசதி கடந்த 2012ஆம் இருந்தது. இவ்வசதியில், இடைத்தரகர்கள் மற்றும் டிராவல் ஏஜன்ட்கள் மூலம், முறைகேடு நடப்பதாக, ரயில்வே அமைச்சகத்திற்கு, புகார் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, பயணிகள் வசதி கருதி, ரயில் டிக்கெட் முன்பதிவு, கடந்த 2013ஆம் ஆண்டு முதல், 60 நாட்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் 120 நாட்களாக முன்பதிவு செய்யும் காலம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.