பயணிகளிடம் இருந்து 3 மாதத்தில் 1.18 கோடி அபராதம் வசூல்… ரயில்வே அமைச்சர் தகவல்
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 1.18 கோடி ரூபாய் பயணிகளிடம் இருந்து அபராதத் தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே இணை அமைச்சர் லோக் சபாவில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ரயில்வே துறை 1.18 கோடி ரூபாய் அபராதத் தொகையை வசூலித்துள்ளது என்று ரயில்வே இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை ரயில்வே துறை நடத்திய சோதனையில் பயணிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை 1.18 கோடி ரூபாய் என்கிறார் இணை அமைச்சர் ராஜன் கோகெய்ன்.
இதுகுறித்து இன்று லோக் சபாவில் ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோகெய்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அந்தப் பதிலில், இந்தியாவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், சுற்றுலாத் தலங்களில் ரயில்வே துறை சோதனை நடத்தியது. அதில், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதத்தில் 1.18 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உரியப் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர், 307 முகவர்கள் மற்றும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 59,115 ஏஜென்சிகள், கள்ளத்தனமாகப் பயணச்சீட்டு விற்ற 7 நிறுவனங்களைச் சோதனை செய்ததில் 1.18 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் இணை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.