சென்னை மழையால், ஒரு நாளைக்கு ரூ.3 கோடி லாபம் பார்த்த கர்நாடக அரசு
பெங்களூர்: தொடர் மழை காரணமாக, மின்சார பயன்பாடு குறைந்ததால், கர்நாடக மாநில கருவூலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி லாபம் கிடைத்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது.
அந்த மழையின் ஆதிக்கம், பெங்களூர் உள்ளிட்ட தென் கர்நாடக மாவட்டங்களிலும் இருந்தது. பெங்களூரில் எப்போதுமே வானம் மேகமூட்டத்தோடு, மழை தூறிக்கொண்டும், சில நேரங்களில் கனமழையாகவும் பெய்து கொண்டிருந்தது.
ஏசி, ஃபேன்
இந்த மழையால், பெங்களூர் உள்ளிட்ட தென் கர்நாடக பகுதிகளில் மக்கள், மின்விசிறி, ஏசி, விவசாய மோட்டார் பம்ப்புகள் போன்றவற்றை பயன்படுத்துவது குறைந்தது. இதனால் பெருமளவில் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது.
மின்சார கொள்முதல்
கர்நாடக மின்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மின்பற்றாக்குறையை சமாளிக்க நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2-3 கோடி செலவில், மின்சாரம் கொள்முதல் செய்துவருகிறோம். ஆனால், மழைக்காலத்தின்போது, மின்தேவை குறைந்ததால், மின்கொள்முதலை நிறுத்தினோம்" என்றார்.
600 மெகாவாட்
பெங்களூர் மாநகரத்தில் தினமும், 3600 மெகாவாட் மின்சாரம், பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், அதில் சுமார் 600 மெகாவாட் மின்சாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. மழை பெய்த கடந்த 2 வாரங்களாக பெங்களூரின் மின்தேவை நாளொன்றுக்கு 3000 மெகாவாட்டாக குறைந்திருந்தது. எனவே மின்சார சப்ளையில் தட்டுப்பாடு ஏற்படவில்லை. மின்வெட்டை அறிமுகம் செய்யவில்லை.
மிச்சம்
மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பதால், மின்சாரத்தை, பணம் கொடுத்து, கொள்முதல் செய்ய வேண்டாம் என்று மின்வாரியங்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.3 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாம்.