பெங்களூரில் 2வது நாளாக இரவில் தொடரும் கனமழை.. நகரமே ஸ்தம்பிப்பு !
பெங்களூர் நகரின் பல பகுதிகளில் 2வது நாளாக இன்று மாலை முதல் கனமழை கனமழை பெய்து வருகிறது.
பெங்களூர்: பெங்களூரில் 2வது நாளாக இரவில் தொடரும் கனமழையால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும், மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது.
தமிழகம், புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே நேற்று இரவு பெங்களூர் நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஜெயநகர், சாந்திநகர் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் காற்று காரணமாக மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் இன்று 2வது நாளாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கோரமங்களா, ஆடுகோடி, மடிவாலா உள்ளிட்ட நகரின் பல இடங்களில் இன்று மாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய தொலைபேசி இணைப்பு தொடர்ந்து பிசியாகவே இருந்ததால் மக்கள் புகார்களை தரக்கூடிய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாலை அலுவலம் முடிந்து வீடு திரும்பியவர்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வார இறுதி நாள் என்பதால் கேளிக்கை விடுதி, சினிமா தியேட்டர் செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் மழையில் சிக்கி பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சில தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இரவிலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் அஞ்சுகின்றனர். சிலிக்கான் சிட்டி என அழைக்கப்பட்டு வரும் பெங்களூர் நகரம் ஓரிரு நாள் பெய்யும் மழைக்கு கூட தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறது.