பெங்களூருவில் பலத்த மழை... சாலைகளில் வெள்ளம்
பெங்களூருவில் திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பெங்களூருவில் பெய்து வரும் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
பெங்களூரு மாநகரில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. பெருவெள்ளம் பெங்களூரு மாநகரை சூழூம் அபாயம் எழுந்தது.
இதனிடையே சில நாட்களாக ஓய்ந்திருந்த மழை இன்று மீண்டும் எட்டிப்பார்த்துள்ளது. சாரல் மழையாக தொடங்கி கனமழையாக மாறியது. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் அலுவலகம் முடிந்து இரவு வீடு திரும்பியவர்கள் அவதிக்கு ஆளாகினர்.
பெங்களூரு மாநகரில் மழை காலங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மாநில நகர வளர்ச்சி துறை எச்சரித்துள்ளது.
இம்மாதம் கடைசி வாரமும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநகரில் மழை காலங்களில் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கும் வகையில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் மாநில அரசின் நகர வளர்ச்சி துறை அமைச்சக இணை செயலாளர் இதயதுல்லா, மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மழை காலங்களில் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக மாநகராட்சி சார்பில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பள்ளி, கல்லூரிகள், பூங்கா, விளையாட்டு மைதானம், ஏரி பகுதியில் மேற்கொண்டால், வளர்ச்சி பணியை குத்தகை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள், அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடிதம் கொடுத்து, வளர்ச்சி பணிகள் நடக்கும் பகுதியில் மாணவர்களை செல்லாமல் தடுக்க அறிவுறுத்த வேண்டும்.
பொதுவாக மழைக்காலத்தில் பொதுமக்கள் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.