ஓ.பி.சி. கிரீமிலேயர் உச்ச வரம்பை ரூ10.5 லட்சமாக உயர்த்த அதிரடி பரிந்துரை!!
டெல்லி: மத்திய அரசின் நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி) இடஒதுக்கீடு பெறுவதற்கான வருவாய் உச்ச வரம்பை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ10.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசின் நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு மண்டல் குழு பரிந்துரைப்படி 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் முன்னேறியவர்களை (கிரீமிலேயர்) தவிர்ப்பதற்காக 1993ல் ஆண்டுக்கு ரூ1 லட்சம் வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இந்த உச்சவரம்பு 2004 ஆம் ஆண்டு ரூ2.5 லட்சமாகவும் 2008ஆம் ஆண்டு ரூ 4. 5 லட்சமாகவும் 2013ஆம் ஆண்டு ரூ6 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டது.
அதுவும் 2013ஆம் ஆண்டே பிறபடுத்தப்பட்டோர் ஆணையம் இந்த உச்சவரம்பை நகர்ப்புறங்களில் ரூ12 லட்சம், கிராமப்புறங்களில் ரூ 9 லட்சம் என நிர்ணயிக்க பரிந்துரைத்திருந்தது. ஆனால் இதை நிராகரித்திருந்த மத்திய அரசு ஒரே அளவாக ரூ6 லட்சம் என உயர்த்தியிருந்தது.
தற்போது இந்த உச்சவரம்பை ரூ10.5 லட்சமாக உயர்த்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தம்மை பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி இந்த கோரிக்கையை ஏற்கக் கூடும் என்றே தெரிகிறது. அதுவும் இந்த ஆண்டின் இறுதியில் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்றால் பிற்படுத்தப்பட்ட சமூகம் நிறைந்திருக்கும் அம்மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு அப்பால் இந்த பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டால் மத்திய அரசின் நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பெருமளவில் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.