தேசிய கீதத்தில் 'அதிநாயக ஜெயகே' என்ற வார்த்தையை நீக்குக... சர்ச்சையை கிளப்பும் ராஜஸ்தான் ஆளுநர்
ஜெய்ப்பூர்: தேசிய கீதத்தில் 'அதிநாயக ஜெயகே' என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங் கூறியுள்ள கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற மாணவர் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் மாநில ஆளுநரான உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய கல்யாண்சிங், தேசிய கவி ரவீந்திரநாத் தாகூர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஜன கண மன' என துவங்கும், நமது தேசிய கீதத்தின் முதல் வரியில், அதிநாயக ஜெயகே என உள்ளது.
அந்த வார்த்தை சுதந்திரத்திற்கு முன் நம் நாட்டில் ஆட்சியில் இருந்த பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை பாராட்டும் வார்த்தை.
இப்போது நாம் சுதந்திரம் பெற்று விட்டதால் அந்த வார்த்தையை நீக்கிவிட்டு, மங்கள என்ற வார்த்தையை சேர்க்கலாம். இது என் கருத்து மட்டுமே என்றார்.
கடந்த 1911 டிசம்பர் மாதம் இந்த கவிதையை தாகூர் எழுதியபோதே, அது பிரிட்டிஷ் அரசை பாராட்டுவதாக உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அதை தாகூர் மறுத்தார். இந்த நிலையில் தற்போது இந்த பிரச்னையை கல்யாண் சிங் எழுப்பியுள்ளார்.