இது அதுக்கும் மேல... தூய கோமியத்துக்காக சுத்திகரிப்பு நிலையம் அமைத்த ராஜஸ்தான்!
ஜோத்பர்: ராஜஸ்தானில் பசு மாட்டு சிறுநீர் அதாவது கோமியம் சுத்திகரிப்பு நிலையத்தை அந்த மாநில அரசே நிறுவியுள்ளது. இதை அந்த மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் திறந்து வைத்துள்ளார்.
பத்மேரா கௌ ஷாலா என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் முலமாக பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளதாம்.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து பேசிய அமைச்சர் ரத்தோர், பசு மாட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களை பற்றியும், அவற்றை பல்வேறு நோய்களுக்கு எப்படி பயன்படுத்தாலாம் என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும் பசு மாட்டின் சிறுநீரிலிருந்து பல்வேறு பொருட்களை நாம் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், பல நோய்களுக்கு கோமியம் சிறந்த மருந்தாக உள்ளது. பாரம்பரியமாக இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதை நாம் தொடர வேண்டும் என்றார்.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜோத்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆயுர்வேத பல்கலைக்கழகம் மற்றும் பிகானீரில் உள்ள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் ராஜஸ்தான் பல்கலைக்கழகம் இடையே கையொப்பமாகியுள்ளதாம்.
ஜலூர் என்ற இடத்தில் இந்த கோமியம் சுத்திகரிப்பு நிலையத்தை ராஜஸ்தான் அரசு அமைத்துள்ளது.