கெலாட், சச்சின் பைலட்டுக்கு சிக்கல்: 108 ஆம்புலன்ஸ் முறைகேடு-சிபிஐ விசாரணைக்கு ராஜஸ்தான் பரிந்துரை!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு அந்த மாநில முதல்வர் வசுந்தரா ராஜே பரிந்துரை செய்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசின் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் ரூ.2.56 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மத்திய முன்னாள் அமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து ராஜஸ்தான் காவல்துறை தலைவர் ஓமேந்திர பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளேன் என்றார். அவரது பரிந்துரையை ஏற்றே சிபிஐ விசாரணைக்கு ராஜஸ்தான் அரசு தற்போது பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து அசோக் கெலாட் கருத்து தெரிவிக்கையில், மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக அதிகாரிகளை நிர்பந்தம் செய்து, இதுபோல ராஜஸ்தான் அரசு செய்ய வைத்துள்ளது' என்று குற்றம்சாட்டினார்.
இதேபோல், சச்சின் பைலட் கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வசுந்தரா ராஜே அரசு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது' என்றார்.