ரஜினி ஒரு மராத்தியர்- வீரசிவாஜி படம் வீட்டில் இருக்கிறது.. நிதின் கட்காரி அதிரடி பேச்சு!
தம்மை பச்சைத் தமிழன் என ரஜினி ஒரு பக்கம் பிரகடனம் செய்ய, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ரஜினி ஒரு மராத்தியர் என பெருமையுடன் பேசியிருக்கிறார்.
டெல்லி: நடிகர் ரஜினிகாந்த் ஒரு மராத்தியர்; மராத்தியர் என்பதற்காக தமது வீட்டில் வீரசிவாஜியின் பெரிய படத்தை வைத்திருக்கிறார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பெருமையுடன் கருத்து தெரிவித்திருப்பது புதிய சலசலப்பை கிளப்பியுள்ளது.
ரஜினிகாந்த் தமது ரசிகர்களிடையே பேசுகையில், 44 ஆண்டுகாலமாக தமிழகத்தில் வசிக்கிறேன்; நான் ஒரு பச்சைத் தமிழன் எனக் கூறியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இந்நிலையில் ரஜினிகாந்துக்காக பாஜகவின் கதவுகள் திறந்திருக்கின்றன என அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சிஎன்என்-நியூஸ் 18 டிவி சேனலுக்கு ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் நிதின் கட்காரி கூறியுள்ளதாவது:
பாஜகதான் சரியான இடம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். அவருக்கான சரியான இடம் பாஜகதான். பாஜக குறித்து நடிகர் ரஜினிகாந்த் சிந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
கட்சி முடிவெடுக்கும்
ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளரா? என்பது எல்லாம் மிக முக்கியமான அரசியல் கேள்விகள். ஆனால் இது தொடர்பாக நான் முடிவெடுக்க முடியாது. பாஜகவும் கட்சியின் நாடாளுமன்ற குழுவும்தான் இது தொடர்பாக முடிவெடுக்கும்.
ரஜினி மராத்தியர்
தென்னிந்தியாவில் ரஜினிகாந்தின் ஆதரவு என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அவர் நல்ல மனிதாபிமானி. ரஜினிகாந்த் ஒரு மராத்தியர். நீங்கள் ரஜினிகாந்த் வீட்டுக்குள் நுழைந்தாலே அங்கு மிகப் பெரிய வீர சிவாஜியின் படம் இருப்பதை பார்க்க முடியும்.
சொந்த கருத்து
ரஜினிகாந்த் தமிழர் அல்ல மராத்தியர் என சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்திருப்பது அவரது சொந்த கருத்து. அதைபற்றி நான் கருத்து சொல்லவிரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்துக்கு சரியான இடமாக பாஜகதான் இருக்கும்.
அப்போது மறுத்தார்...
நான் சென்னை செல்லும்போதெல்லாம் ரஜினிகாந்தை சந்திப்பேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அப்போதெல்லாம் அரசியலுக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்திருக்கிறேன். ஆனால், நிதின்ஜி நான் அரசியலுக்கு தகுதியானவன் அல்ல என ரஜினி மறுத்திருக்கிறார். இவ்வாறு நிதின் கட்காரி கூறியுள்ளார்.
சர்ச்சை
ரஜினிகாந்த் தம்மை பச்சைத் தமிழன் என்கிறார். ஆனால் தமிழகத்தில் அவர் ஒரு கன்னடர் என விமர்சிக்கப்படுகிறது. அதேநேரத்தில் ரஜினிகாந்துக்கு மராத்தியர் என்ற அடிப்படையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிதின் கட்காரி ஆதரவு தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.