அடங்காத வன்முறை... முடங்கிய இயல்பு வாழ்க்கை... காஷ்மீரில் ராஜ்நாத்சிங் 2-வது நாளாக இன்றும் ஆய்வு
ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க கமாண்டர் புர்கான்வானி கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் வன்முறை வெடித்தது. 47 வது நாளாக நேற்றும் காஷ்மீர் மாநிலத்தில். இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.
காஷ்மீர் வன்முறைகள் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று சிறப்பு விமானம் மூலம் காலை 11.30 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையம் சென்றடைந்தார். 2 நாள் பயணமாக வருகை தந்த அவர் முதல் கட்ட பங்குவர்த்தக பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், ராணுவம், போலீஸ், துணை ராணுவ அதிகாரிகளை சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.
காஷ்மீர் ஆளுநர் என்.என்.ஓரா மற்றும் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப வேண்டும், அமைதி வரவேண்டும் என்று விரும்பும் அனைவருடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது என்றார்.
இன்றும் அவர் ஸ்ரீநகரில் உள்ள நேரு விருந்தினர் இல்லத்தில் தங்கி பல்வேறு தலைவர்களை, அமைப்புகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.