வன்முறை சம்பவங்கள்.. அனைத்து கட்சி குழுவுடன் செப்.4ல் மீண்டும் காஷ்மீர் செல்கிறார் ராஜ்நாத்சிங்
ஸ்ரீநகர்: காஷ்மீர் நிலவரத்தை ஆய்வு செய்தவற்காக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 4ம் தேதி அம்மாநிலத்திற்கு செல்ல உள்ளார்.
ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்ஹான் வானி காஷ்மீரில், பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் ஒரு பிரிவினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 52 நாட்களுக்கு பிறகு நேற்று இரவுதான் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த வாரம், காஷ்மீர் சென்று அங்கு நிலவரத்தை ஆய்வு செய்தார். டெல்லி திரும்பிய ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த அமைச்சர் அருண் ஜேட்லியுடன் நிலவரம் பற்றி ஆலோசனை நடத்தினார். அனைத்து கட்சி குழுவை காஷ்மீர் அழைத்து செல்லலாம் என அப்போது முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து செப்டம்பர் 4ம் தேதி, அனைத்து கட்சி தலைவர்களை காஷ்மீர் அழைத்து செல்வது என்று ராஜ்நாத்சிங் முடிவு செய்துள்ளார்.