வன்முறை நீடிக்கும் காஷ்மீரில் பெல்லட் குண்டுகளுக்கு மாற்று ஏற்பாடு.... ராஜ்நாத்சிங் உறுதி..
ஜம்மு: காஷ்மீரில் தொடர்ந்து கலவரம் நடந்து வந்த நிலையில் நேற்று இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் சென்றார். இந்தப் பயணத்தின் போது காஷ்மீர் மாநில முதலமைச்சர் மெக்பூபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், பெல்லட் குண்டுகளுக்கு பதில் மாற்றுத் துப்பாக்கிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜ்நாத்சிங் உறுதியளிதுள்ளார்.
காஷ்மீரில் புர்கன் வானி கொல்லப்பட்டத்தற்கு பின்னர் உருவான கலவரச் சூழல் இன்னும் தணியவில்லை. இந்தக் கலவரத்திற்கு இதுவரை போலீசார் உட்பட 68 பேர் பலியாகியுள்ளனர்.
தொடர் கலவரத்தை கட்டுப்படுத்த, காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவரான ஒமர் அப்துல்லா தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீர் சென்றார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அங்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இன்று காஷ்மீர் முதலமைச்சர் மெக்பூபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
• காஷ்மீரில் நடந்து வரும் கலவரம் கவலை அளிப்பதாக உள்ளது.
• பாதுகாப்பு படையினர் கொல்லப்படுவது குறித்து மட்டும் நான் கவலைப்படவில்லை.
• அனைத்து மக்களும் கொல்லப்படுவது குறித்தும் கவலை அடைந்துள்ளேன்.
• பெல்லட் குண்டுகளுக்கு பதில் மாற்று துப்பாக்கிகள் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• ராணுவத்தை மட்டுமே நாம் குறை சொல்லக் கூடாது.
• காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது மக்களை காப்பாற்றியவர்கள் ராணுவத்தினர்.
• காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழு ஒன்று அழைத்து வரப்படும்..
• காஷ்மீரில் உள்ள இளைஞர்களுடன் தீவிரவாதிகள் விளையாட வேண்டாம்.
• துயரத்தில் இருக்கும் காஷ்மீர் மக்களுக்கு உதவ அதிகாரிகள் விரையில் நியமனம்.
• காஷ்மீர் இல்லாமல் இந்தியாவின் எதிர்காலம் என்பது இல்லை.
• காஷ்மீர் இளைஞர்களை தவறான வழியில் நடத்திச் செல்ல முயற்சிப்போரை அடையாளம் காண வேண்டும்.
• காஷ்மீர் இளைஞர்களின் கையில் கற்களுக்கு பதில் பேனாக்களும், புத்தகங்களும் இருக்க வேண்டும்.
• இங்கு வருவதற்கு முன் சொன்னது போன்று என்னை சந்திக்க விரும்பிய 300 பேரை சந்தித்தேன்.
• காஷ்மீரின் அமைதியை விரும்பும் 20 பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
• மக்களுக்கு அமைதிதான் வேண்டும். அதனை அடைவோம்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறினார்.