ஒரு உள்துறை அமைச்சர் பேசுகிற பேச்சா இது...!
அங்ரெய்ல், மேற்கு வங்கம்: வங்கதேசத்துக்குள் மாடுகள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள். அவர்கள் மாட்டுக் கறி கிடைக்காமல் கஷ்டப்படட்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
இப்படியெல்லாமா ஒரு உள்துறை அமைச்சர் பேசுவார் என்று கேட்கும்படியாக அமைந்திருக்கிறது ராஜ்நாத் சிங்கின் பேச்சு.
தேசிய அளவில் பசு வதையை அமல்படுத்த வேண்டும் என்று பேசி வருகிறார் ராஜ்நாத் சிங். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் அங்ரெய்ல் என்ற இடத்தில் அவர் வங்கதேசத்திற்குள் மாடுகள் கடத்தப்படுவதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் தடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு படையினர் மத்தியில் பேசுகையில் இவ்வாறு பேசினார் ராஜ்நாத் சிங். இதனால் வங்கதேசத்தினருக்கு மாட்டுக் கறி கிடைக்காத நிலை ஏற்படும் என்பது ராஜ்நாத் சிங்கின் கருத்தாகும்.
ஒரு மாடு கூட போகக் கூடாது
இதுகுறித்து ராஜ்நாத் சிங் பேசுகையில், வங்கதேசத்திற்குள் ஒரு மாடு கூட போகக் கூடாது. இதை இந்திய, வங்கதேச எல்லையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும்.
மாட்டுக் கறிக்குப் பஞ்சம் வரட்டும்
இதனால் வங்கதேசத்தில் மாட்டுக் கறி கிடைக்காத நிலை ஏற்படும். அதற்கு பஞ்சம் ஏற்படும். இதன் மூலம் நமது மாடுகளும், பசுக்களும் காக்கப்படும்.
விலை உயர்ந்து விட்டது
எல்லைப் பாதுகாப்புப் படையினர் தற்போது தீவிரமாகக் கண்காணித்து வருவதால் மாடுகள் கடத்தப்படுவது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வங்கதேசத்தில் 30 சதவீத அளவுக்கு மாட்டுக் கறி விலை உயர்ந்துள்ளதாகவும் அறிகிறேன்.
மேலும் கிடுக்கிப்பிடி பிடியுங்கள்
இந்த விழிப்புணர்வை பாதுகாப்புப் படையினர் மேலும் அதிகரிக்க வேண்டும். ஒரு மாடு கூட போகக் கூடாது. அப்போதுதான் 80 சதவீத அளவுக்கு விலை உயரும். வங்கதேச மக்களும் மாட்டுக் கறி சாப்பிடுவதை நிறுத்துவார்கள் என்றார் அவர்.
17 லட்சம் கால்நடைகள்
இந்தியாவிலிருந்து கடந்த ஆண்டு 17 லட்சம் கால்நடைகள் வங்கதேசத்திற்குள் கடத்தப்பட்டதாக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.