திருநங்கைகளுக்கும் சம உரிமை.. வரலாற்று சிறப்பு மிக்க மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்!
டெல்லி: திமுக ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் வகையிலான சட்ட மசோதா ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேறியது. தனி நபர் மசோதா ஒன்று ராஜ்யசபாவில் நிறைவேறியது 46 வருடங்களிலேயே இதுதான் முதல் முறையாகும்.
ஆண் மற்றும் பெண்களைப்போலவே, திருநங்கைகளுக்கும், சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்பது போன்ற அம்சங்களை கொண்ட சட்ட மசோதாவை திருச்சி சிவா கடந்த மார்ச் மாதம் ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். அந்த தனி நபர் மசோதா மீதான விவாதம் முடிந்து இன்று ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 'திருநங்கைகள் உரிமை சட்டம் 2014' என்ற பெயரிலான இந்த சட்டம் இனிமேல் மக்களவைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கும் மசோதா நிறைவேறினால், குடியரசு தலைவர் ஒப்புதலுடன் இச்சட்டம் அமலுக்கு வரும்.
ராஜ்யசபா வரலாற்றிலேயே 46 வருடங்களுக்கு பிறகு தனி நபர் (அரசு சார்பில் அல்லாத) மசோதா ஒன்று நிறைவேறியுள்ளது இதுதான் முதல் முறை. இந்த பெருமையை தமிழகத்தை சேர்ந்த எம்.பியான சிவா பெற்றுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சிவா "சமூகத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக திருநங்கைகள் கூறிவரும் நிலையில்தான், இந்த மசோதாவை தாக்கல் செய்யும் முடிவுக்கு வந்தேன். இந்த சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவருக்குமே நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.