கண்ணீர் விட்டு கதறியும் கைகூப்பியும் பலனில்லை... ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை!
சாமியார் ராம் ரஹீம் கண்ணீர் விட்டு கதறிய நிலையிலும் அவருக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர்: கடந்த 2002-ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இறுதி வாதத்தின்போது தன்னை மன்னித்து விடுமாறு ராம் ரஹீம் சிங் கண்ணீர் விட்டு அழுத போதிலும் அது பலனளிக்கவில்லை.
ஹரியாணா மாநிலம், சிர்சாவில் தேரா சச்சா சவுதா அமைப்பை தொடங்கியவர் ராம் ரஹீம் சிங். சாமியாரான இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு இரு பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை சிபிஐ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
14 ஆண்டுகள் கழித்து...
இந்நிலையில் சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கழித்து சாமியார் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் புகாரில் அவர் குற்றவாளி என்பதை பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த 25-ஆம் தேதி உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சாமியாரின் தண்டனை விவரங்களை அறிவிக்க சுனாரியா சிறையில் தற்காலிக நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.
ரோட்டக் சிறையில்...
தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் ரோட்டக்கில் உள்ள சிறைக்கு சென்றார். அங்கு இரு தரப்பு வாதங்களும் நடந்தன. அப்போது சாமியாருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.
கண்ணீர் விட்டு கைகூப்பியும்...
வயதையும், உடல்நலனையும் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்றும் சிறை சாலையை மாற்ற வேண்டும் என்றும் ராம் ரஹீமின் வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். அப்போது ராம் ரஹீம் தான் செய்த குற்றங்களை மன்னித்து விட்டு விடுமாறு கண்ணீர் விட்டு கதறினார். இதைத் தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
பலனில்லை...
அப்போது சாமியார் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை அளித்தார். இதன் மூலம் ராம் ரஹீம் கண்ணீர் விட்டு கதறியது பலனிக்காமல் போனது.