ராமர் கோயில் கட்டும் தேதி நவம்பரில் அறிவிப்பு.. எம்பி சாக்ஷி மகராஜ் கருத்தால் பரபரப்பு
ராமர் கோயில் கட்டும் தேதி பற்றி வரும் நவம்பரில் அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : அயோத்தியில் ராமர் கோயில் எப்போது கட்டப்படும் என்று நவம்பரில் தேதி வெளியிடப்படும் என பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், சர்ச்சை பேச்சை தொடர்ந்து பேசி வரும் எம்பி சாக்ஷி மகராஜ் ராமர் கோயில் கட்டும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
விரைவில் தீர்வு
இதுகுறித்து சாக்ஷி மகராஜ் எம்பி லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு விரைவில் எட்டப்பட உள்ளது.
முஸ்லிம்களின் சமரசம்
பாபர் மசூதி தொடர்பாக கோரிக்கை விடுத்த முஸ்லிம் பெரியவர்கள் பலர் தற்போது உயிருடன் இல்லை. அவர்களது வாரிசுகளும் அயோத்தி விவகாரத்தில் சமரசத்திற்கு தயாராகி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை
எனவே, ராமகோயில் பிரச்சனையில் விரைவில் சுமூக முடிவு எட்டப்படும். கோயில் இயக்கத்தில் முக்கியமான தலைவரான மகந்த் தர்ம தீர்த், சாதுக்கள், சன்னியாசிகள் ஆகியோருடன் முஸ்லிம் வாரிசுகள் நடத்தி வரும் பேச்சு வார்த்தையில் சமரசம் எட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நவம்பரில் தேதி அறிவிப்பு
எந்தவிதமான சமரசங்கள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து தற்போது கூற இயலாது. அதே நேரத்தில் அயோத்தியில் கோயில் கட்டப்படும் தேதி நவம்பர் மாதத்தில் நிச்சயம் அறிவிக்கப்படும் என்று சாக்ஷி மகராஜ் கூறினார்.