என்னது லாலு மகனுக்கும், ராம்தேவ் சொந்தக்கார பொண்ணுக்கும் கல்யாணமா?
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விசாரிப்பதற்காக மட்டுமே பாட்னாவில் அவரது வீட்டிற்கு சென்றதாக யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகனும், அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவிற்கு தனது உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதற்கான பேச்சு நடத்தவே பாட்னா சென்றதாக எழுந்துள்ள செய்தியை யோகா குரு ராம் தேவ் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத்தை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ் கூறியதாவது:
தனது உறவுக்காரப் பெண்ணை லாலு பிரசாத் மகனுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கான பேச்சு நடத்தவே இங்கு வந்ததாகக் கூறுவது சில ஊடகங்கள் பரப்பிவிட்ட வதந்தியை தவிர வேறொன்றும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
பதஞ்சலி நிறுவனத்தின் பொருள்களை விநியோகித்து வரும் டீலர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக வியாழக்கிழமை ராம்தேவ் பாட்னா சென்றார்.
அப்போது, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவரை பார்க்கச் சென்றார்.
இந்நிலையில் இதனை மீடியாக்கள் தவறாக சித்தரித்துவிட்டன. மேலும், அரசியல் குறித்தோ அல்லது ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரம் குறித்தோ லாலுவிடம் பேச்சு நடத்தவில்லை என்றும் ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார். நமது நாட்டின் அரசியல் பாரம்பரிய மிக்க லாலு பிரசாத் உடல் நலம் பாதிக்கப்பட்டது தம்மை கவலையில் ஆழ்த்தியது என்றும் அவர் கூறினார்.
லாலு பிரசாத் நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். மேலும், லாலு பிரசாத் யோகா பயிற்சி செய்துவருவதாகவும் அவர் சொன்னார். தேஜ் பிரதாப் யாதவ், அவரது தம்பி தேஜாஜி ஆகிய இருவரும் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேஜாஜி பிகார் மாநில துணை முதல்வராக இருந்து வருகிறார்.