நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்பு...டெல்லியில் விழா ஏற்பாடுகள் தீவிரம்
நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்க உள்ளதை ஒட்டி டெல்லியில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
டெல்லி: இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்க உள்ளார். இதற்கான விழா ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. மேலும் டெல்லியில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் நாளை நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக பதவியேற்க உள்ளார்.
நாளை காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் ராணுவ அணிவகுப்புடன் நாடாளுமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்படுவார். அங்கு பிரதமர் மோடி உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அவரை வரவேற்பார்கள்.
பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர், ராம்நாத் கோவிந்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பதவியேற்புக்குப் பின்னர் அவர் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் ராஜபாதையில் சில தினங்களாக நடைபெற்று வருகின்றன.
பாஜக சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த், பல்வேறு சர்ச்சைகளை கடந்து அதிக அளவிலான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.