பாலியல் பலாத்கார வழக்கு: சீடர்கள் புடைசூழ கோர்ட்டில் ஆஜரான நித்யானந்தா
பெங்களூர்: பெண் சீடர் ஆர்த்தி ராவ் அளித்த பாலியல் பலாத்கார புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் ராமநகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜரானார்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். அந்த ஆசிரமத்தில் இருந்த சீடரான ஆர்த்தி ராவ் என்பவர் நித்யானந்தா மீது போலீசில் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.
இது குறித்த வழக்கு ராமநகர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது அதை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி மஞ்சுளா. அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது நித்யானந்தாவின் வழக்கறிஞர் முத்துமல்லையா கூறுகையில்,
இந்த வழக்கின் முக்கிய ஆவணங்கள் உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அந்த ஆவணங்களை பரிசீலித்து அறிக்கை வரும் வரை இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.