ஆர்பிஐ கவர்னருக்கு ரூ.2 லட்சம் சம்பளம் : வீட்ல வேலக்காரங்க கூட இலையாம்!
டெல்லி : ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலுக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும் அவரது வீட்டில் வேலையாட்கள் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உர்ஜித் பட்டேல் கடந்த செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவியேற்றார். இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய வங்கி பதிலளிள்துள்ளது.
அதன்படி உர்ஜித் பட்டேல் வசிக்க மும்பையில் உள்ள வங்கிகளுக்கான குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாதம் 2 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் உர்ஜித் பட்டேலின் வீட்டில் பணியாட்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 2 கார்கள் வழங்கப்பட்டு அதற்கு 2 ஓட்டுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பொறுப்பேற்றார் என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு 1.69லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அவருடைய சம்பளம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1.78 லட்சம் ரூபாயாகவும், 2015ஆம் ஆண்டு 1.87 லட்சமாகவும் உயர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரகுராம் ராஜனின் சம்பளம் 2.04 லட்சத்திலிருந்து 2.09 லட்சமாக அதிகரிக்கப்பட்டதாகவும் ஆர்டிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடைசியாக செப்டம்பர் 4ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு 27 ஆயிரத்து 933 ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. ரகுராம் ராஜனுக்கு 3 கார்கள் மற்றும் 4 ஓட்டுநர்கள் வழங்கப்பட்டதாகவும் 9 பணியாட்களும் அளிக்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மும்பையில் ரகுராம் ராஜன் வசிக்க ஒரு பங்களா வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.