பழைய ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற வாய்ப்பு... மக்களுக்கு இல்லை, கூட்டுறவு வங்கிகளுக்கு!
கடந்த ஆண்டு செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: செல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட உயர் மதிப்பு நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளும், அஞ்சல் அலுவலகங்களும் இன்னும் 30 நாள்களுக்குள் மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு செல்லாதவையாக அறிவித்தது. மேலும் மக்கள் தங்கள் வசம் உள்ள அந்த மதிப்பிலான நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்ட கால அவகாசத்தையும் வழங்கியது.
இதனால் பொதுமக்கள் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்தனர். ஏடிஎம் மையங்களில் பணம் கிடைக்காமல் அவசர தேவைக்காக பணம் எடுக்க வந்தவர்கள் கடும் அவதிப்பட்டனர். நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்றபோது உடல் நலம் பாதிக்கப்பட்டும், கூட்ட நெரிசலில் சிக்கியும் சிலர் உயிரிழந்துவிட்டனர்.
மத்திய அரசின் நடவடிக்கையால் கருப்பு பண முதலைகள் யாரும் பாதிக்கப்படவில்லை. மாறாக ஏழைகள், அடித்தட்டு மக்களே பாதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளுக்கு ஆர்பிஐ ஒரு அனுமதியை வழங்கியது. அதில் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை இன்னும் 30 நாள்களுக்குள் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் அஞ்சல் அலுவலகங்களும் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.